பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து புதிய ‘குவாட்' கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா பெரும் பக்கபலமாக இருந்து வந்தது.

உள்நாட்டு போர் தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் தங்கி இருந்து அந்நாட்டு ராணுவத்துக்கு உதவி புரிந்து வந்தன.

இந்த சூழலில் தலீபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்க ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறி வருகின்றன.

கிட்டத்தட்ட முழு படைகளும் வெளியேறிவிட்ட நிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் கை மீண்டும் ஓங்கியுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக அமெரிக்கா ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 4 நாடுகள் இணைந்து புதிய ‘குவாட்' கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.

‘குவாட்' எனப்படுவது நான்கு தரப்பு பாதுகாப்பு கூட்டணியாகும். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆப்கானிஸ்தானின் நீண்டகால அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவை பிராந்திய இணைப்புக்கு முக்கியமானவை என்று பிராந்திய நட்பு நாடுகள் (அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், மற்றும் உஸ்பெகிஸ்தான்) கருதுகின்றன. எனவே ஆப்கானிஸ்தானில் சமாதான முயற்சிகளை முன்னெடுக்க பிராந்திய நட்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

மேலும் வளர்ந்து வரும் பிராந்திய வர்த்தக பாதைகளை திறப்பதற்கான வரலாற்று வாய்ப்பைக் உணர்ந்து, வர்த்தகத்தை விரிவு படுத்துவதற்கும், போக்குவரத்து இணைப்புகளை உருவாக்குவதற்கும், வணிகத்தில் இருந்து வணிக உறவுகளை வலுப்படுத்துவதற்கும் பிராந்திய நட்பு நாடுகள் ஒத்துழைக்க விரும்புகின்றன.

அதன்படி பரஸ்பர ஒருமித்த கருத்துடன் இந்த ஒத்துழைப்பின் முறைகளை தீர்மானிக்க வரும் மாதங்களில் பிராந்திய நட்பு நாடுகள் சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ம் ஆண்டு ‘குவாட்’ கூட்டமைப்பை உருவாக்கியதும், இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா முன்வைக்கும் சவால்களை ஓர் அணியாக இணைந்து எதிர்கொள்வதை நோக்கமாக கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி