வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயம் மற்றும் உகந்தைமலை முருகன் ஆலயம் ஆகியவற்றின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் இன்று 10.07.2021 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

ஆறுபடைவீடு கொண்ட திருமுருகனின் ஏழாவது படைவீடாகத் திகழ்வது கதிர்காமத் திருத்தலம். இது இலங்கையில் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையையும் உடையது.

கதிர்காமம் ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கதிர்காமம் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரைத் தலம். இந்துக்கள்,பௌத்தர்களுக்குரிய புகழ் பெற்ற வழிபாட்டுத் தலம் இதுவாகும்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என முச்சிறப்பு வாய்ந்த கதிர்காமத்திருத்தலம் இனமதபேதமற்று இந்துக்களும் பௌத்தர்களும் சங்கமிக்கும் புனித பூமியாகும். அதேவேளை வெளிநாட்டவர்களையும் தன்னகத்தே ஈர்க்கும் திருத்தலமாகும்.

கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

இதேவேளை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மூன்று மலைக்கோயில்கள் உள்ளன. தாந்தாமலை, சங்கமண்கண்டிமலை, உகந்​தை மலை ஆகியன இவையாகும். இவற்றுள் மிகவும் தொன்மை வாய்ந்தது உகந்தை மலை. இது 2000ஆண்டுகள் பழைமைவாய்ந்த திருத்தலம்.

முருகனுக்கு உகந்த மலை உகந்​தைமலை என்பர். திரைச்சீலை திறக்காமல் பூசைகள் நடைபெறும் ஆலயம் இது. மலை உச்சியில் ஏழு வற்றாத நீர்ச்சுனைகள் இருப்பது இவ்வாலயத்திற்கு மேலும் வனப்பூட்டவதாக உள்ளது.

இராவணன் பூகாரம்பம் செய்து பாவம் தீர்த்த ஆலயம் இது. இங்கு தலவிருட்சமாக வெள்ளைநாவல் மரம் உள்ளது. இது மலையடிவாரத்தில் உள்ளது.

மட்டக்களப்பு, கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில், பாணமை ஊடாகச் சென்று பின்னர் வனத்தினூடாக 17கி.மீ. சென்றால் மனோரம்மியமான சூழலில் இயற்கையாக அமையப்பெற்றுள்ள உகந்​தைமலையை அடையலாம்.

பொத்துவிலையடுத்துள்ள லகுகலை பிரதேச செயலாளர் பிரிவில் உகந்தைமலை முருகனாலயம் அமைந்துள்ளது.

கிழக்கே ஆர்ப்பரிக்கும் கடல் சூழ அடர்ந்த வனாந்தரம், நீர்நிலைகள் மத்தியில் கிறங்க வைக்கும் மலைத்தொடர். தொடர்ந்து வீசும் தென்றல். இத்தகைய மனோரம்மியமான சூழலில் அமைந்துள்ள உகந்​தைமலையில் வடிவேல் குன்றமும் நீர்ச்சுனைகளும் மக்களை கவர்ந்திழுக்கின்றன.

குன்றம் எறிந்த குமரவேல் தனது உடல் பெருக்கி வாழ்வு உயர்த்திநின்ற அவுணகுல மன்னனை உரங்கிழித்தபின்னர் எறிந்த வேலானது பல்பொறிகளாகியதென்றும் மீண்டுவந்த அத்தகைய வேற்படைக்கதிர்களில் முதன்மையானது இங்கே (உகந்த) தங்கிற்று என்றும் ஐதீகம் கூறுகின்றது.

இன்று முதல் தொடர்ந்து 15நாட்கள் திருவிழா நடைபெறும்.15நாள் திருவிழாவின் பின்னர் எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெறும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி