இலங்கை காவல் நிலையங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீதான அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி சிவில் சமூக அமைப்பு ஒன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

சித்திரவதைக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜூலை 2, வெள்ளிக்கிழமை மக்கள் சக்தி அமைப்பின் சார்பில், மக்கள் சட்டத்தரணிகள் மன்றத்தின் சட்டத்தரணிகள் முறைப்பாட்டை செய்துள்ளனர்.

பாதுக்கை மற்றும் நெலுவ காவல் நிலையங்களில் அண்மையில், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமி யுவதி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவங்களிலிருந்து "இலங்கை சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட சமிக்ஞையை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்" எனவும், அவை நிகழாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மக்கள் சக்தி அமைப்பின் நிர்வாக உறுப்பினர் அஷிலா தண்தெனியவால், இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முன்வைத்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிறுவனங்களுக்குள் அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்த அடிப்படை உரிமையை மீறுவது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என மக்கள் சக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆபாச புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் முறையிடுவதற்காக, 16 வயது சிறுமி ஒருவர் அண்மையில் தனது பெற்றோருடன் பாதுக்க காவல் நிலையத்திற்கு சென்றிருந்ததாக அந்த அமைப்பு தெரிவிக்கின்றது.

"கடந்த 21ஆம் திகதி பாதுக்க காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்து ரசீதை பெற்றுக்கொண்ட பின்னர், முறைப்பாட்டை செய்ய சென்ற சிறுமியின் தந்தையை அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் பொலிஸ்நிலைய சிறைக்கூடத்தில் அடைத்துள்ளனர்.

சிறுமியின் தாய் பின்னர் சம்பவ இடத்தில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தாக்கப்பட்டதாக, மக்கள் சக்தி அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, முறைப்பாடு ஒன்றை செய்வதற்காக, ஜூன் 29ஆம் திகதி தனது தாயுடன் நெலுவ காவல் நிலையத்திற்குச் சென்ற 15 வயது சிறுமி அங்குள்ள ஒரு காவல்துறை அதிகாரியால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக அந்தக் குழு மேலும் தெரிவித்துள்ளது.

"அங்கும்கூட சிறுமியின் தாய் நுட்பமாக திசை திருப்பப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்."

அரச காவலரால் துன்புறுத்தல்

இலங்கை காவல்துறையினருக்குள் நடந்த இரண்டு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் காவல்துறையினரால் குடிமக்களுக்கு இன்னும் பாதுகாப்பை வழங்க முடியுமா என்ற கேள்வியை எழுப்புவதாக மக்கள் சக்தி அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.

"காவல்துறையின் அவநம்பிக்கை சட்டத்தின் ஆட்சியை மோசமாக பாதிப்பதை யாராலும் தடுக்க முடியாது."

காவலில் இருந்த சந்தேகநபர்களை காவல்துறையின் உதவியுடன் கொலை செய்வதன் மூலம் இலங்கை காவல்துறையினர் இரண்டு மாதங்களுக்கு முன்னர், சட்டவிரோத மற்றும் பயங்கரமான நடத்தைகளைக் காட்டியதாகவும் மக்கள் சக்தி அமைப்பு தனது முறைப்பாட்டில் நினைவுபடுத்தியுள்ளது.

பாதுக்கை மற்றும் நெலுவ காவல் நிலைய சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பெண்  மற்றும் சிறுமிக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும், இலங்கை காவல்துறையில் தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான வன்முறைகளைத் தடுக்கவும், இலங்கையின் முன்னணி மனித உரிமை அமைப்பான, மனித உரிமைகள் ஆணைக்குழு, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென, மக்கள் சக்தி அமைப்பு அந்த கடிதத்தின் ஊடாக கோரியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி