தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் உடன்படும் அனைத்து சிறு கட்சிகளும் இணைத்துக்கொள்ளப்படுதெனத் தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் எம்.பி, எவரையும் தவிர்த்து விட்டுப் பயணிக்கும் எந்தவிதத் தேவையும் கிடையாது எனவும் தெரிவித்தார்.

ஜே.வி.பி தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டமையால்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உட்பட ஏனைய கட்சிகள் அழைக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இன்றைய விகிதாசார முறைமை தொடர்ந்து பேணப்படுவதை, பொது நன்மை கருத்தை தாமும் ஆதரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச எம்.பியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பியும் உறுதியளித்துள்ளனர் எனவும் மனோ கணேசன் எம்.பி கூறினார்.

சிறு கட்சிகளின் தேர்தல் சீர்திருத்த பேச்சுவார்தையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏன் அழைக்கப்படவில்லை என்ற சர்ச்சை தொடர்பில் கருத்துக் கூறிய அவர் மேலும் கூறியுள்ளதாவது, 

“தமிழ், முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் இன ரீதியான சிறு கட்சிகளும், அரசியல் ரீதியான சிறு கட்சிகளும்  தேர்தல் சீர்திருத்தம் என்ற பொதுப் பிரச்சினையை கூட்டாகவே எதிர்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

“இந்தப் பிரச்சினை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பியுடன் பேசுகின்ற அதேவேளை, நானும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் எம்.பியும், ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச எம்.பி உடனும் இது தொடர்பில் பேசியுள்ளோம்.

“இன்றைய விகிதாசார முறைமையே எமது பொது நிலைப்பாடு என நாம் அவருக்கு கூறியபோது, சஜித் பிரேமதாச எம்பி, தான் இன்றைய விகிதாசார முறைமைக்கு முழு ஆதரவு தருவதாக எமக்கு உறுதியளித்துள்ளார்.

“இது தொடர்பாக தமது கட்சி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும்பண்டார எம்.பியை அழைத்து அறிவுறுத்தல் வழங்கினார்.

“அதேபோல்,  தேர்தல் சீர்திருத்த பேச்சுவார்தை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களுடனும் நான் நேரடியாக பலமுறை பேசியுள்ளேன்.

“வடக்கு மாகாணத்தில் புதிய கலப்பு முறைமை தமக்கு சாதகமாக அமையக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும், நாடு முழுக்க சிதறி வாழும், தமிழ், முஸ்லிம் மக்களின் நன்மை கருதி தாமும்  இன்றைய விகிதாசார முறைமை தொடர்ந்து பேணப்படுவதை ஆதரிக்க தயார் என கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரன் எம்.பி என்னிடம் உறுதியளித்துள்ளார்.

“தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களும் இத்தகைய நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாக நான் அறிந்துள்ளேன்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி