பர்கினோ பாசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 100 பேர் உயிரிழந்தனர்.ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பாசோ. அந்நாட்டில் கடந்த 2015 ம் ஆண்டு முதல் போகோஹரம், ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ராணுவமும் பொலிசாரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சண்டையின்போது பொதுமக்களை குறிவைத்தும் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில் மாலி மற்றும் நைஜர் நாடுகளின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பர்கினோ பாசோவின் யாஹா மாகாணம் சோல்ஹன் கிராமத்திற்குள் நேற்று இரவு துப்பாக்கி உள்பட பயங்கர ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் நுழைந்தனர்.

அந்த கிராமத்தில் இருந்த மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும், அந்த கிராமத்தின் சந்தை பகுதியில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். கடைகள், வீடுகளை தீ வைத்து எரித்தனர்.

பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 100 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பின்னர் பயங்கரவாதிகள் அந்த கிராமத்தை விட்டு தப்பிச்சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடந்த கிராமத்திற்கு விரைந்து சென்று பயங்கரவாதிகளின் தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.நா.சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி