பரிசோதனைகளின்றி கொழும்பு துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்ட சிவப்பு கொள்கலன்கள் தொடர்பான தகவலை சுட்டிக்காட்டி அர்ச்சுனா எம்.பி கடுமையாக கூச்சலிட்ட நிலையில் இன்றை சபை
நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உரையாற்றும் போது, அர்ச்சுனா இராமநாதன் எம்.பி ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி உரையாற்ற சந்தர்ப்பம் கேட்டபோது அது மறுக்கப்பட்டதாகவும், அர்ச்சுனா நாடாளுமன்றத்திற்குள் உள்ளே நடைபெற்ற விடயம் தொடர்பிலேயே பேச முற்பட்டதாகவும், அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டமை தவறானது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதன் பின்னரே சபையில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
பரிசோதனைகளின்றி கொழும்பு துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்ட சிவப்பு கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக இன்று பாராளுமன்றில் மோதல் வெடித்தது.
இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற சிறப்புரிமைகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொய் கூறுவதாக சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
இதனையடுத்து சீற்றமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் கடும்தொனியில் சத்தமிட்டுக்கொண்டிருந்தார். இருப்பினும் தொடர்ச்சியாக பேசுவதற்கான வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை.
இதனையடுத்து அவர் மேலும் அதிகமாக சத்தமிட்டு பேசிக்கொண்டிருந்தார். இதற்கிடையில் பாராளுமன்றஉறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு பேசுவதற்கு சபாநாயகரால் வாய்ப்பளிக்கப்பட்டது.
இதன்போது கொள்கலன் தொடர்பான விடயங்களை தான் புலனாய்வுப்பிரிவிடம் 5 மணித்தியாலங்கள் செலவிட்டு கூறியதாக தெரிவித்திருந்தார்.