கொட்டாஞ்சேனையில், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட
சம்பவம் தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்குமாறு, பொலிஸ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
பம்பலப்பிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும், சிறுமி படித்த பாடசாலையைச் சேர்ந்த வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளரும், நேற்று முன்தினம் ஆணைக்குழுவில் ஆஜரானபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் ஊடகப் பேச்சாளர் நிஹால் சந்திரசிறி தெரிவித்தார்.
அன்றைய தினம் ஆணைக்குழுவின் முன் ஆஜராகாத சிறுமி படித்த பாடசாலையின் அதிபர் மற்றும் அவரை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் அந்தப் பாடசாலையின் கணித ஆசிரியர் மீது, சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்காததற்கான காரணங்களை விசாரிக்கவும் மனித உரிமைகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைக்குப் பிறகு தனது பரிந்துரைகளை வெளியிடும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.