கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தரை கடத்தி காணாமலாக்கிய சம்பவம் தொடர்பாகத் தன்னைக் கைது செய்து,
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எடுத்துள்ள முடிவால், தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பு வழங்குமாறு கோரி, பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் பிரதிவாதிகளாக, குற்றப் புலனாய்வுத் துறையின் விசேட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன, குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமாலா, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு அமைச்சர் அனுர திசாநாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏப்ரல் 8ஆம் திகதியன்று, மட்டக்களப்புப் பகுதியில் தனது கட்சியின் அமைப்பு நடவடிக்கைகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது, குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழு வந்து தன்னைக் கைது செய்ததாக மனுதாரர் கூறுகிறார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக தாம் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தான் அறிந்ததாகத் தெரிவித்துள்ள மனுதாரர் குற்றப் புலனாய்வுத் துறையில் தனக்குத் தூங்குவதற்குகூட போதுமான வசதிகள் இல்லை என்றும் கூறியுள்ளார்.
அmத்துடன், வழக்கறிஞர்களை அணுகப் போதுமான வசதிகள் தனக்கு இல்லை என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் தன்னைக் கைது செய்து தடுத்து வைத்திருப்பதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ள அவர், தன்னைத் தடுத்து வைக்கப் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை செல்லாததாக்கும் தீர்ப்பையும் கோரியுள்ளார்.
மேலும், தனது வழக்கறிஞர்களை அணுகுவதைத் தடுப்பதன் மூலம் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரியும், தனது அடிப்படை உரிமைகளை மீறியதற்காக நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரியும், பிள்ளையான் தனது வழக்கறிஞர்கள் மூலம் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.