இலங்கையில் இன்று உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அமைதியாக நடைபெற்றது.
காலை 7 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணி வரை பொதுமக்கள் தங்களுக்குரிய வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்குகளை சுமுகமாக அளித்தனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் போல் இன்று நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலும் அமைதியாக இடம்பெற்றது.
28 மாநகர சபைகள், 36 நகர சபைகள், 275 பிரதேச சபைகள் என மொத்தம் 339 உள்ளூராட்சி சபைகளுக்கு இந்தத் தேர்தல் நடைபெற்றது. 8 ஆயிரத்து 257 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 75 ஆயிரத்து 589 பேர் போட்டியிட்டனர்.
நாடளாவிய ரீதியில் 4 ஆயிரத்து 877 உள்ளூராட்சி சபை வட்டாரங்களில் அமைக்கப்பட்டுள்ள 13 ஆயிரத்து 759 வாக்களிப்பு மத்திய நிலையங்கள் ஊடாக இன்று வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றன.
வாக்கெண்ணும் பணிகளுக்காகத் தொகுதி மட்டத்தில் 5 ஆயிரத்து 783 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் குறித்து வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.