கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
4R-ALS விமானத்தால் இயக்கப்படும் யுஎல் 122 விமானம் இன்று முற்பகல் 11:59 மணிக்கு சென்னையிலிருந்து கொழும்பு வந்தடைந்த நிலையில், விரிவான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் காஸ்மீர் - பஹல்காம் தாக்குதல் தொடர்பில் தேடப்படும் ஒரு சந்தேகநபர் அந்த விமானத்தில் இருப்பதாக நம்பப்படுவதாக சென்னை பகுதி கட்டுப்பாட்டு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
முழுமையான சோதனைக்கு பின்னர், விமானம் மேலதிக நடவடிக்கைகளுக்காக அனுமதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த கட்டாய பாதுகாப்பு நடைமுறை காரணமாக சிங்கப்பூருக்கு திட்டமிடப்பட்ட UL 308 விமானம் தாமதமாக புறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமது பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பதாகவும், எல்லா நேரங்களிலும் உயர்ந்த தரத்தை பராமரிக்க உறுதிபூண்டுள்ளதாகவும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.