கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பாக கட்டப்பட்டிருக்கும் விழிஞ்சம்
சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து நாட்டுக்காக அர்ப்பணித்தார்.
8,800 கோடி ரூபாய் செலவில் இந்த விழிஞ்சம் துறைமுகமானது கட்டப்பட்டிருக்கிறது. பெரிய சரக்கு கப்பல்களை நிறுத்தும் வகையில் இந்த துறைமுகம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருந்தாலும் இந்தியாவில் பெரிய சரக்கு கப்பல்கள் வந்து நிறுத்தி சரக்குகளை ஏற்றி இறக்கும் வகையில் பெரிய துறைமுகங்கள் கிடையாது. இதனால் இந்தியா வெளிநாடுகளின் துறைமுகங்கள் வாயிலாகவே கப்பல்களில் சரக்குகளை அனுப்பி வைத்து வந்தது.
இதன் விளைவாக இந்தியாவிற்கு பல்வேறு வருவாய் இழப்பு ஏற்பட்டது. அதனை போக்கும் வகையில் விழிஞ்சம் துறைமுகம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியா ஆண்டுதோறும் 220 மில்லியன் டாலர் செலவை சேமிக்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச கடல் வழி வணிகத்தில் இந்த விழிஞ்சம் துறைமுகம் முக்கியமான இடத்தை பிடிக்கும் என அதானி குழுமம் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறது.
குறிப்பாக இந்தியா சரக்கு ஏற்றுமதி இறக்குமதிக்காக வெளிநாட்டு துறைமுகங்களை சார்ந்து இருக்கும் போக்கு இனி மாறும். விழிஞ்சத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த துறைமுகமானது பெரிய சரக்கு கப்பல்கள் , டேங்கர் கப்பல்கள் வந்து சரக்குகளை ஏற்றி இறக்க தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கிறது.இந்த துறைமுகத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு கடல் ஆழம் 18 முதல் 20 மீட்டர்கள் வரம் இருப்பதால் பெரிய பெரிய கப்பல்களை கையாள்வது எளிமையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக அடுத்த தலைமுறை சரக்கு கப்பல்கள் அதாவது 24000 +TEU திறன் கொண்ட கப்பல்களை கூட விழிஞ்சம் துறைமுகம் கையாளும் திறன் கொண்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஏப்ரல் மாதம் MSC Turkiye என்ற மத்திய கிழக்கு நாட்டை சேர்ந்த ஷிப்பிங் கம்பெனியின் மிகப்பெரிய கண்டெய்னர் கப்பல் விழிஞ்சம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. 400 மீட்டர் நீளம், 61 மீட்டர் அகலம் மற்றும் 34 மீட்டர் ஆழம் கொண்ட இந்த எம்எஸ்சி கப்பல் 24,300 TEU திறன் கொண்டது. உலகின் பெரிய கண்டெய்னர் கப்பல் இது.
இந்த கப்பலையே விழிஞ்சம் துறைமுகத்தில் நிறுத்தி சரக்குகளை கையாண்டிருக்கின்றனர். தற்போதைக்கு இந்தியாவிற்கு வர வேண்டிய சரக்கு கப்பல்கள் பெரும்பாலும் சிங்கப்பூர், கொழும்பு, துபாய் உள்ளிட்ட துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து சிறு சிறு கப்பல்கள் மூலம் தான் இந்தியாவிற்கு சரக்குகள் கொண்டுவரப்படுகின்றன. அதேபோல் இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய பொருட்களும் இங்க இருந்து சிறுசிறு கப்பல்கள் வழியாக சிங்கப்பூர், கொழும்பு உள்ளிட்ட நாடுகளின் துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்துதான் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்தியாவில் பெரிய கப்பல்களை கையாளும் துறைமுகம் இல்லாததே இதற்கு காரணமாகும். இதனால் இந்தியா கப்பலில் சரக்குகளை அனுப்பி வைப்பதற்கு அதிக அளவிலான தொகையை செலவிட வேண்டி இருந்தது. தற்போது பெரிய சரக்கு கப்பல்களை கையாளும் திறன் கொண்டு துறைமுகம் பயன்பாட்டிற்கு வந்திருப்பதால் இந்தியா இனி இந்த கூடுதல் தொகையை செலவிட வேண்டியது கிடையாது.
அதானி நிறுவனத்திற்கு சொந்தமான அதானி போர்ட் நிறுவனம் தான் விழிஞ்சம் துறைமுகத்தை கட்டமைத்திருக்கிறது. இந்திய துணை கண்டத்தின் ஒரே டிரான்ஸ் ஸிப்மென்ட் ஹப்பாக இது இருக்கிறது. இந்த விழிஞ்சம் துறைமுகத்தின் வாயிலாக இந்தியாவை சேர்ந்த ஏற்றுமதியாளர்களும் இறக்குமதியாளர்களும் ஒவ்வொரு கண்டெய்னருக்கும் இதுநாள் வரை செலவு செய்து வந்த 80 இலிருந்து 100 டாலர்கள் வரையிலான தொகையை மிச்சப்படுத்த முடியும்.
இனி இந்தியா வெளிநாடுகளுக்கு சரக்குகளை அனுப்ப வேறு நாடுகள் துறைமுகங்களை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது. ஏனெனில் விழிஞ்சம் துறைமுகத்தில் அதனை கையாண்டு விடலாம். இந்த விழிஞ்சம் துறைமுகத்தின் மூலம் நாட்டின் கப்பல் போக்குவரத்து மற்றும் சரக்கு கையாளன் திறன் உயர்ந்திருப்பதோடு மட்டுமில்லாமல் கேரள மாநிலத்திற்கு நல்ல பொருளாதார வளர்ச்சியை தரக்கூடியதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்த துறைமுகம் எளிதாக ரயில் மற்றும் சாலை நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்பட்ட ஒரு துறைமுகமாக இருக்கிறது. தேசி நெடுஞ்சாலை 47 இந்த துறைமுகத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் தான் இருக்கிறது. இது தமிழ்நாட்டை இணைக்கும் ஒரு சாலை. அதேபோல இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிற்கு உள்ளேயே ரயில் நிலையம் இருக்கிறது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையமும் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால் சர்வதேச சரக்கு போக்குவரத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மையமாக இது மாறி இருக்கிறது.
விழிஞ்சம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்துவிட்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும் என தெரிவித்தார். இந்தியாவின் கடலோர மாநிலங்கள் ,துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும் எனக் குறிப்பிட்ட அவர் பெரிய சரக்கு கப்பல்களை நிறுத்த இடம் அளிக்கும் வகையில் துறைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
கடந்த மாதம் பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் நான் இந்த துறைமுகத்தை தொடங்கி வைக்கிறேன் என தெரிவித்த அவர் அவர்களின் இறப்பு தேச விரோத மற்றும் பிளவுபடுத்தும் சக்திகளிடம் இருந்து நமது நாட்டை பாதுகாப்பதில் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியத்தை நமக்கு நினைவூட்டுகிறது என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயனும் கலந்து கொண்டார் அதேபோல காங்கிரஸ் எம்பி சசி தரூரும் பங்கேற்றார். இதனை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி இந்த காட்சி பலரின் தூக்கத்தை கலைக்க கூடியது என குறிப்பிட்டார். இந்த விழாவில் கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்து சோதனை முயற்சி கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதமே தொடங்கியது. தற்போது ஆழ் கடல் சரக்கு போக்குவரத்து துறைமுகமாக இது கட்டப்பட்டிருப்பதால் இனி 20 ஆயிரம் கண்டைனர்களைக் கொண்ட எந்த சரக்கு கப்பலும் இந்தியாவிற்கு நேரடியாக வரலாம். சர்வதேச கடல் பாதையிலிருந்து 10 கடல் மைல் தொலைவிலேயே துறைமுகம் அமைந்திருப்பதால் கடல் வணிகப் போக்குவரத்தில் இந்தியா முக்கிய இடத்தை பிடிக்க இருக்கிறது.
-இந்திய ஊடகம்