'மன்னாரில் இருந்து புத்தளத்துக்குச் சொப்பின் பையுடன் வந்தவர்கள் இன்று பத்து கப்பல்களை
வாங்கும் நிலையை அடைந்துள்ளனர். டக்ளஸ் எல்லா அரசிலும் அமைச்சராக இருந்தார். நாங்கள் யாரையும் பாரபட்சம் பார்க்கமாட்டோம். பொதுமக்களின் பணத்தை ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்' என்று, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் வவுனியா மாநகர சபைக்கான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களைஆதரித்து நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
சட்டம் சாதாரண மக்களுக்கே
நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து எமது பிரச்சினைக்குத் தீர்வு காண்பதே உண்மையான அரசியல். உங்களுக்குத் தெரியும் இலங்கையில் சட்டமும் ஒழுங்கும் பெரிய மனிதர்களுக்கு இருக்கவில்லை. அது சாதாரண மக்களுக்காகவே இருந்தது. ஆனால், இன்று அதனை உங்களின் வாக்குகளின் மூலம் மாற்றியுள்ளோம். இன்று மிகப் பெரிய இலஞ்ச, ஊழலில் ஈடுபட்ட முதலைகளைப் பிடித்து அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் வேலை நடக்கின்றது. முன்னொரு காலத்தில் அமைச்சர்களைக் கண்டு பொலிஸார் ஓடி ஒளிந்தார்கள். இன்று பொலிஸூக்குப் பயந்து அமைச்சர்கள் ஓடி ஒளியும் நிலையை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம்.
ராஜபக்ஷவே பெரிய முதலை
கிளிநொச்சியில் ஒருவர் கேட்டார், வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற கள்வர்களை நீங்கள் பிடிக்கமாட்டீர்களா என்று. இங்கே இருக்கின்ற கள்வர்களையும் நாங்கள் பிடிப்போம். இங்கும் மன்னாரில் இருந்து புத்தளத்துக்குச் சொப்பின் பையுடன் வந்தவர்கள் இருக்கின்றனர். இப்போது அவர்களது சொத்துக்கள் மூலம் பத்து கப்பல்களை வாங்க முடியும். டக்ளஸ் எல்லா அரசிலும் அமைச்சராக இருந்தார். நாங்கள் யாரையும் பாரபட்சம் பார்க்க மாட்டோம். பொதுமக்களின் பணத்தை ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்.
பெரிய முதலைகள் கொழும்பிலேதான் இருக்கிறார்கள். ராஜபக்ஷ மிகப் பெரிய முதலை. நாமல், யோஷித ஆகியோருக்குப் பொதுமக்களின் பணத்தைச் சூறையாடியமைக்காக வழக்குகள் பதிவு செய்துள்ளோம். எனவே, உங்கள் வாக்குகள் மூலம் நாட்டின் சட்டமும் ஒழுங்கும் நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றது. நாட்டின் பாதாளக் குழுக்களை உருவாக்கியவர்கள் ராஜபக்ஷக்களும், விக்கிரமசிங்கக்களும், பிரேமதாஷக்களுமே.
பெண்கள் பொட்டு வைத்தாலும் சோதனை
முன்பு சோதனைச் சாவடிகளில் பெண்கள் பொட்டு வைத்துச் சென்றால் இருமுறை சோதனை செய்வார்கள். பொட்டு இல்லாவிடில் ஒரு தரம் சோதனை செய்வார்கள். முஸ்லிம் மக்கள் என்றால் மூன்று தரம் சோதனை செய்வார்கள். அதை மாற்றும் செயற்பாட்டை நாம் முன்னெடுத்துள்ளோம். நாங்கள் இந்த அரசைப் பொறுப்பெடுத்து 5 மாதங்களே ஆகின்றன. முச்சக்கரவண்டியை வேகமாகத் திருப்பலாம். பேருந்தையும், கப்பலையும் வேகமாகத் திருப்புவது கடினமே. பிழையான வழியில் சென்ற தேசத்தையே திருப்ப நாம் முற்பட்டுள்ளோம். உங்களுக்கும் எனக்கும் கிடைத்தது சொர்க்கமான பூமி அல்ல. வங்குரோத்தான ஒரு நாடு.
ரணில் இந்த நாட்டை ஆண்ட போது டொலரின் பெறுமதி காலை ஒரு விலையிலும், மாலை ஒரு விலையிலும் இருந்தது. இன்று அதில் ஒரு ஸ்திரத்தன்மை காணப்படுகின்றது. உங்கள் பொருளாதார பிரச்சினைகள் தீர்வதற்குக்கொஞ்சக் காலம் எடுக்கும்.
இனி கனடா வேண்டாம்
காணாமல் ஆக்கப்பட் ஒரு மகன் மீண்டும் கிடைத்தது போல் வடக்கு மாகாணம் எமக்குக் கிடைத்துள்ளது. அதனை நாங்கள் அன்போடு பாதுகாப்போம். வடக்கை வளப்படுத்த எம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். பலாலி விமான நிலையத்தை விருத்தி செய்வோம். அங்கு கொழும்பில் இருந்து ஆட்களை வேலைக்கு அமர்த்த நாங்கள் எதிர்பார்க்கவில்லை. கைத்தொழில் பேட்டைகளை உருவாக்குவோம். காங்கேசன்துறை, பரந்தன், மாங்குளம் ஆகிய பகுதிகளில் அவை அமையவுள்ளன. அதன் பின்னர் உங்களது உறவுகளுக்குச் சொல்லுங்கள் கனடா சென்று பனியிலே கஷ்டப்படும் நிலை மாறும் என்று.
100 ஏக்கர் காணிகள் விரைவில் விடுவிப்பு
இந்தப் பிரதேசத்தில் இருக்கும் காணிகளை யுத்த தேவைகளுக்காகவும் அதற்குப் பிறகும் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். பொதுமக்களின் காணிகளை அவர்களுக்கே வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வடக்கில் கிட்டத்தட்ட 25 பகுதிகளில் 100 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை விரைவில் விடுவிப்பதற்கு அடையாளம் கண்டுள்ளோம். சிலர் நினைக்கின் றார்கள் தாங்கள் பிடித்த நிலங்களை அப்படியே வைத்திருக்க வேண்டும் என்று. ஏனெனில் மீண்டும் ஒரு யுத்தம் வரலாம். வந்தால் தங்களுக்குச் சுலபம் என நினைக்கின்றார்கள். மீண்டும் ஒரு யுத்தம் வருமா என்று உங்களிடம் கேட்கின்றேன். இனிமேல் யுத்தம் வராது. நாங்கள் தேசிய சமாதானத்தை நிலை நிறுத்தும்ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புவோம்.
வடக்கிலும் இனவாதிகள்
வடக்கில் நிலங்களை விடுவிக்கும் போது தெற்கில் உள்ள இனவாதிகளுக்குக் கஷ்டமாக இருக்கும். அதேபோல் வடக்கிலும் இனவாதிகள் உள்ளனர். நான்கு மாதங்களில் ஒரு அப்பக் கடையைப் போடுவதே கடினம். நாங்கள் ஆனையிறவு உப்பு உற்பத்தியை ஆரம்பித்துள்ளோம். அதனைத் தொடங்கிய பின்னர் சுமந்திரனுக்கு அது பிரச்சினையாக உள்ளது. உப்பு பைக்கற்றில் பெயர் பிழையாம். உப்பிலே நீங்கள் பார்ப்பது பெயரையா, சுவையையா? இவ்வாறான சின்ன விடயங்களுக்காக இனவாதத்தைத் தூண்டும் ராஜபக்ஷக்கள் போன்ற சகோதரர்கள் வடக்கிலும் உள்ளனர்.
வடக்கின் பெரிய தமிழ்க் கட்சி நாங்களே
தமிழ்க் கட்சிக்கு வாக்களிக்குமாறு இன்று சொல்கின்றார்கள். இலங்கையில் உள்ள மிகப் பெரிய தமிழ்க் கட்சி தேசிய மக்கள் சக்தியே. வன்னி, யாழ்ப்பாணம், நுவரெலியா, பதுளை போன்ற மாவட்டங்களில் உள்ள மிகப்பெரிய தமிழ்க் கட்சி தேசிய மக்கள் சக்தியே. சுமந்திரனுக்கான வாக்குகள் யாழ்ப்பாணத்தில் இம்முறை கிடைக்கவில்லை. யாழ்ப்பாணத்தில் தமிரசுக் கட்சியில் ஒருவர்கூட நாடாளுமன்றத்தில் இல்லை. சிறீதரன் கிளிநொச்சி வாக்குகளினால் தான் நாடாளுமன்றத்துக்கு வந்தார். இலங்கையில் உள்ள பெரிய முஸ்லிம் கட்சியும் தேசிய மக்கள் சக்தியே. பெரிய சிங்களக் கட்சியும் அதுவே.
கம்மன்பில ராஜபக்ஷவின் கோளையாள்
தெற்கின் கம்மன்பில போன்றோர் வடக்கிலும் உள்ளனர். அரசியல் அநாதைகளாக உருவாகியிருக்கின்றார்கள். அவர்கள் இனவாதத்தை விதைக்கின்றார்கள். ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில்தான் பிள்ளையானைக் கைது செய்திருக்கின்றோம். அவரைக் கைது செய்தவுடன் அவருடன் தொலைபேசி அழைப்பில் கதைக்க வேண்டும் என முதலாவதாக முற்பட்டவர் யார் என்று தெரியுமா? பிள்ளையானின் மனைவி அல்ல. ரணில் விக்கிரமசிங்க.
அவர்கள் இருவரும் நண்பர்களா? ஒருபோதும் இல்லை. கம்மன்பில பிள்ளையானின் சட்டத்தரணியாக ஏன் மாறுகின்றார். அவர் ராஜபக்ஷக்களின் கோளையாள். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும் போது ராஜபக்ஷக்கள், ரணில், சஜித் அனைவரும் குழப்பம் அடைந்துள்ளனர். நாட்டை வளப்படுத்த முற்படும்போது கள்வர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
சுமந்திரனை விட யாழ்ப்பாணத்துக்கு பல முறை சென்றுள்ளேன்
ஒற்றுமையை ஏற்படுத்தும்போதுஇனவாதிகள் குழப்பம் அடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் சுமந்திரனும் கஜேந்திரகுமாரும் எமது வேட்பாளர்கள் தொடர்பாக தேவையில்லாத விடயங்களைச் சொல்லி வருகின்றனர். இப்படியான பொய்களை மக்கள் நம்ப வேண்டாம். கிராமத்திலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை அமைப்போம். எனவே, மக்கள் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டும். தமிழரசுக் கட்சிக்கு ஒரு தொன் காசு வழங்கினாலும் வேலை செய்ய மாட்டார்கள்.
வடக்கு மாகாணசபையில் நடந்தது உங்களுக்குத் தெரியும். மஹிந்த தெற்கிலே களவெடுத்தார். தேர்தலில் கூறுவார் சிங்கள ஜாதி சிங்கள ஜாதி என்று. சிங்கள மக்கள் வாக்களித்தார்கள். அவர் திறைசேரியை பூஜ்ஜியமாக்கினார். வடக்கிலும் அப்படிச் சிலர் உள்ளனர். அவர்கள் அரசியல்சோம்பேறிகள். சும்மா இருப்பார்கள்.
தேர்தல் காலங்களில் தமிழர் உரிமை, தமிழர் உரிமை என்பார்கள். தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள். பின்னர் அவர்கள் இலண்டனுக்குப் போய்விடுவார்கள். இதுதானே இதுவரை காலமும் நடந்தது. சில தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இங்கு தேர்தலில் போட்டியிடும் நிலையில் அவர்கள் அரசியல் சுற்றுலா பயணிகளாகவே உள்ளனர்.
நான் நினைக்கின்றேன் சுமந்திரனை விட நான் அதிகமாக யாழ்பாணம் போயிருப்பேன் என்று. எனவே, தேசிய மக்கள் சக்தி உங்களுடைய கட்சி' என்றார்.
-முரசு