இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சில நிமிடங்களுக்கு முன்பு இலங்கைக்கு வந்தடைந்தார்.
இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (04) இரவு வந்தடைந்தார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரஸேகர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரால், பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் இராஜதந்திரிகள் குழுவினருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் "நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு" (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.
இந்திய பிரதமர் இந்நாட்டிற்கு விஜயம் செய்யும் நான்காவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார, கலாச்சார மற்றும் வரலாற்று தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்வது, இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்வதுமே இந்த அரச விஜயத்தின் நோக்கமாகும்.
இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளது.
அதேபோல் இலங்கையிலிருக்கும் நாட்களில் இந்திர பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியவையும் தரிசிக்க உள்ளதோடு, இந்திய ஒத்துழைப்புடன் இலங்கையின் முன்னெடுக்கப்படும் பல வேலைத்திட்டங்களையும் திறந்து வைக்கவுள்ளார்.
இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
இலங்கையுடனான இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நகர்வில் இந்தியா தற்போது அதிதீவிரமாக செயற்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை அமையப்பெற்றுள்ளதுடன் சர்வதேசத்தின் கவனத்தையும் பெற்றுள்ளது.
இந்நிலையில் அவரின் வருகையை முன்னிட்டு அதிதீவிர பாதுகாப்புக்கள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை காணக்கூடியதாய் உள்ளது. இதில் குறிப்பாக அவருடைய பாதுகாப்புகாக இந்தியாவில் இருந்து சிறப்பு வாகனங்களுடன் இந்திய உளவுப்பிரிவின் விசேட அதிகாரிகளும் இலங்கையில் நிலைகொண்டுள்ளனர்.
அத்தோடு, இந்திய விமானப்படை, மற்றும் அந்நாட்டு இராணுவத்தின் விசேட படைப்பிரிவகளும் இலங்கையை வந்தடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் முக்கியமாக இந்தியாவின் MI-17 உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்படுவதற்காக தெரிவிக்கப்படுகிறது.
மோடியின் வருகையின் போது, நாட்டின் பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் உளவுத்துறைத் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.