எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காகத் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள்
நிராகரிக்கப்பட்டமை தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
ஜனநாயகத் தமிழ்க் தேசியக் கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் கட்சி, ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெவ்வேறு மாவட்டங்களில் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.துரைராசா, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டன. இந்த வழக்குகளில் மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் முன்னிலையாகியிருந்தார்.
மேற்படி வழக்குகளின் விசாரணையின் போது சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி, இது சம்பந்தமாக சுமுகமான முடிவுக்கு வர விரும்புவதாக மன்றுரைத்தார்.
சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் ஆயம் குறித்த வழக்குகள் மீதான விசாரணையைஎதிர்வரும் முதலாம் திகதி வரையில் ஒத்திவைத்துள்ளது.
எனினும், அன்றைய தினத்துக்கு முன்னர், சட்டமா அதிபர் திணைக்களம், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் மனுதாரர்களின் சட்டத்தரணிகள் ஆகிய தரப்பினர்களுக்கு இடையே கலந்துரையாடல் நடத்தப்பட்டு அதன்போது எட்டப்படும் தீர்மானம் தொடர்பில் மன்றுக்கு அறியப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சட்டமா அதிபர் திணைக்களத்தில் நாளைமறுதினம் முற்பகல் 10 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என்று மனுதாரர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்புக்கு பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு தொடர்பில் சட்டமா அதிபரால் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.