அண்மையில் பரீட்சை திணைக்களம் வெளியிடப்பட்ட

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளில் குறிப்பாக, திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பிரதான முஸ்லிம் பாடசாலையான சாஹிரா கல்லுாரி மாணவர்களில், 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டமை  திட்டமிட்ட சதி என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

இன்று (03) கிண்ணியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,  திருகோணமலை ஸாஹிரா கல்லூரி அதிபர் முகைஸையும், ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்திக் குழு உறுப்பினர்களையும் சந்தித்து, மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக கலந்துரையாடினோம். 
பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்ற பல நிகழ்வுகள்,  சென்ட் ஜோசப் பரீட்சை மண்டபத்தின் பொறுப்பதிகாரி மற்றும்  மூதூரை சேர்ந்த மேலதிக உதவி அதிகாரியின் நடவடிக்கை குறித்தும் பாரிய சந்தேகத்தை எமக்கு தோற்றுவித்துள்ளது.

திருகோணமலை நகரில் உள்ள பழைமை வாய்ந்த பாடசாலைகளை விட, குறிப்பாக ஸாஹிரா கல்லூரியின் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், கடந்த 10 வருட காலமாக குறைந்தபட்சம் 10க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவத் துறையிலும் பொறியியல் துறையிலும் தேர்வாகி வரும் நிலையில், இந்தச் செயல் கல்லூரி மீதான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாகவே நோக்கப்படுகிறது.

இம்முறை 4 மாணவிகள் பொறியியல் துறைக்கும் 9க்கும் மேற்பட்ட மாணவிகள் மருத்துவத் துறைக்கும் தெரிவுசெய்யப்படுவார்கள் என்று கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையிலேயே பெறுபேறுகள் வெளியாகாமல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கல்வித் திணைக்களத்தினால், கல்லூரி அதிபர் மற்றும் 70 மாணவிகள் மீது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டபோது, மேலதிக பரீட்சை பொறுப்பதிகாரி நடந்துகொண்ட விதம் தொடர்பாக, மாணவிகள் அவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை குழுவுக்கு முன்வைத்துள்ளனர்.

 பர்தாவும் துப்பட்டாவும் அணிந்திருந்த மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் வெளிவரமாட்டாத என்பதனை, பல சந்தர்ப்பங்களில் பரீட்சை மேலதிக பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

இதனால் பரீட்சையில் தோற்றிய மாணவிகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும் கல்வித் திணைக்கள   சட்ட நடவடிக்கை குழு முன்னிலையில் வாக்குமூலமளித்துள்ளார்கள்.

மேலும், கல்வித் திணைக்கள விசாரணை குழுவினர், ஒவ்வொரு மாணவியரும் அவர்களின் வாக்குமூலங்களை எழுதுவதற்கு முன்னர், திருமலை வலயக் கல்விப் பணிமனையைச் சேர்ந்த சிலர் அவர்கள் சொல்வதை முதலில் எழுதச்  சொன்னார்கள். அதன் பின்னர், வாக்குமூலம் எழுத்துமூலம் கொடுக்கப்பட்ட நிலையில், வலயக் கல்விப் பணிமனையைச் சேர்ந்தவர்கள் அவர்கள் கூறுவதையே முடிவாக எழுதச் சொல்லி மாணவிகளை பணித்திருக்கிறார்கள்.

பின்னர், ‘ஒவ்வொருவரும் சுயமாக எழுத்துமூலம், வாக்குமூலம் அளித்துள்ளீர்கள். இதில் சிலருக்கு பரீட்சை பெறுபேறுகள் வரமாட்டா” என்றும் கூறியிருக்கிறார்கள். இதனை குறித்த, மேலதிக பரீட்சை மண்டப அதிகாரியை பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சியாகவே நாம் கருதுகின்றோம்.

முதல் நாளில் 70 மாணவிகளுக்கும் பொறுப்பதிகாரி  இருவரும் துப்பட்டாவை விலக்கி அவர்களின் காதுகளை காட்டுமாறு கூறியபோது, மாணவிகள் அதனை செய்துவிட்டே பரீட்சை எழுதியிருக்கிறார்கள்.

ஐந்து பாடங்களின் பரீட்சை முடியும் வரை, மூதூரை சேர்ந்த மேலதிக பொறுப்பதிகாரி ‘உங்கள் எவருக்கும் பரீட்சை பெறுபேறுகள் வரமாட்டா’ என்பதனை முன்கூட்டியே கூறி வந்திருக்கிறார்.

அவ்வாறே பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விசரணையை ஒரு கண்துடைப்பாகவே கருதவேண்டி இருக்கிறது

இதேவேளை, சாஹிரா கல்லுாரி மாணவிகளின் பெறுபேறுகளை வெளியிடாது, இடைநிறுத்தியமையை அனுமதிக்க முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத்  பதியுதீன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோருடன்  தொலைபேசியில் தொடர்புகொண்டு மேற்படி விடயத்தின் பாரதுாரமான பாதிப்பு தொடர்பில் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன், பரீட்சை மீளாய்வுகளுக்காக எதிர்வரும் 05ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமென அறிவித்தல் வெளியாகி உள்ளதால், அதற்கு முன்னர், உடனடியாக பெறுபேறுகளை வெளியிடுமாறும் அவர் ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்” எனவும் முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி