இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடும் கோட்டாபய ராஜபக்ஷவின்

குடியுரிமை தொடர்பில் மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பித்துள்ளன.

இதற்கான பிரதான காரணம், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள குடியுரிமை நீக்கப்பட்டுள்ளவர்களது பெயர் பட்டியலில் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்படாமையாகும்.

எவ்வாறாயினும் கோட்டாபயவின் அமெரிக்க குடியுரிமை நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளன என்ற விடயத்தை ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்த முடியும் என  கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்குவோா் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சில தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்த ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, கோட்டாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமெரிக்க பிரஜை அல்ல என்றும், அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களையும் முன்வைத்தார்.

அந்த ஆவணங்கள் தொடர்பிலும் சமூக ஊடகங்கள் ஊடாக கேள்விகள் எழுப்பப்ட்ட போதிலும் சட்டத்தரணி அலி சப்ரி நவம்பர் 10ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை  விலக்கிக் கொள்ளப்பட்டமைக்கான அனைத்து ஆவணங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நேற்று திங்கட்கிழமை பீபீசி சிங்கள சேவையின் முகநூல் நேரடிநேர்காணலில் கலந்து கொண்டு கூறும் போது, “எந்தவிதமான ஆவணங்களையும் நாம் உத்தியோகபூர்வமாக நாம் கேட்டிருக்கவில்லை. குறைந்தது அவரது அடையாள அட்டையின் பிரதியைக் கூட நாம் கேட்கவில்லை. யாரிடமும் அவ்வாறான ஆவணங்களை நாம் கோரவில்லை என்ற விடயத்தையே நாம் கூற வேண்டியுள்ளது” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி