அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றில் நிர்வாக தெரிவு கூட்டத்தின் பின்னர்

அண்ணன் தம்பி ஆகிய இரு சகோதர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையில் அண்ணன் உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்று (07) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சகோதரன் உட்பட 3 பேரை கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்..

சம்மாந்துறை வண்டு வீதி மலையடிக் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய மீராமுகைதீன் மஹ்றூப் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்திலுள்ள மஜ்ஜிதுல் முனீர் பள்ளிவாசல் புதிய நிர்வாக தெரிவுக்கான கூட்டம் சம்பவ தினமான நேற்று பிற்பகல் 4.30 மணிக்கு பள்ளிவாசலில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்ட சிலர் எதிர்வரும் நோன்பு பெருநாள் முடிந்ததும் நிர்வாக தெரிவை செய்யுமாறு கோரியுள்ளனர். மற்றுமொரு குழுவினர் சிலருடன் புதிய நிர்வாகத்தை தெரிவு செய்யுமாறு கோரியதையடுத்து அண்ணன் தம்பியான இரு சகோதரர்களுடைய குழுக்களுக்கிடையே முறுகல் நிலை எற்பட்டதையடுத்து புதிய நிர்வாக தெரிவை எதிர்வரும ஞாயிற்றுக்கிழமை (09) மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கூட்டத்தில் இருந்து வெளியேறியவர்களான அண்ணன் தம்பியான இரு சகோதரர்களை கொண்ட குழுவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இரு குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் அண்ணன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் உயிரிழந்தவரின் சகோதரான தம்பி உட்பட 3 பேரை கைது செய்ததுடன் உயிரிழந்தவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவுக்கமைய மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி