இலங்கையில் நிலவிய மூன்று தசாப்தகால போரின் போது நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்
அகதிகளாக தங்கியிருந்த மக்கள், மீண்டும் நாட்டுக்குள் வருவதற்கு இருக்கும் தடைகளை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்காக, தற்போதுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
போரின் போது, வடக்கில் வாழ்ந்த மக்களில் ஒரு பகுதியினர், பாதுகாப்புக்காக இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்று, தற்போது இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.
அmந்த மக்கள் இலங்கை திரும்புவதற்கு, தற்போதுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்கள் தடையாக இருப்பதால், அவற்றைத் திருத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அது தொடர்பில் விரைவில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், இந்தியாவில் இருந்து கடல் வழியாக நாட்டிற்கு வந்த ஒரு சிறு குழந்தை உட்பட மூன்று பேர் தலைமன்னார் பகுதியில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக அவர்கள் நாட்டுக்குள் வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
24 வயது தம்பதியினரும் மூன்றரை வயது குழந்தையுமே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள், மே 2023இல் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றவர்கள் என்று, பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.