திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து
கூடியவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, கடற்படையினருக்கு மீன்பிடித்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேற்படி அறிக்கையை அடிப்படையாகக்கொண்டே சம்பவம் தொடர்பில் முடிவொன்றுக்கு வரமுடியும் என்பதோடு, அடுத்தக்கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் என்றும், அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை, குச்சவெளி கடற்பரப்பில் நேற்று (03.06.2025) சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் மீனவர் மீது கடற்படையினர் மேற்கொண்டனர் எனக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் தனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையிலேயே சம்பவம் தொடர்பில் அமைச்சரால் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது,
“சட்டவிரோத மீன்பிடி முறையானது, கடலுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும். ஒரு சில மீனவர்களின் வருமானத்துக்காக பெரும்பாலானவர்களின் வருமானம் இழக்கப்படுகின்றது. அதனால்தான் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுக்குமாறு கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“திருகோணமலை சம்பவம்கூட, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் ஏற்பட்டதெனக் கூறப்படுகின்றது. விசாரணைகளின் பின்னரே உண்மை என்னவென்பது தெரியவரும்.
“சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையும் தவறு, துப்பாக்கிச்சூடு நடத்துவதும் தவறு, அதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதும் தவறு. எனவே, அறிக்கை கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று, அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.