முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள், எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையன்று,

குடும்ப மயானத்தில் இடம்பெறுமென்று, அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பாலித்த தெவரப்பெரும, தனது 64ஆவது வயதில், நேற்றைய தினம் (16) உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கியே அவர் உயிரிழந்தார் என்று, அவருடைய உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

1960இல் பிறந்த பாலித்த குமார தெவரப்பெரும, இலங்கை அரசியலில் பலராலும் பேசப்பட்ட, பிரசித்தி பெற்ற அரசியல் கதாபாத்திரமாகும்.

2002இல், மத்துகம பிரதேச சபைத் தலைவராகத் தெரிவான பாலித்த தெவரப்பெரும, மேல் மாகாணசபை உறுப்பினராகவும் செயற்பட்டவராவார்.

2010 முதல் 2020 வரையான காலப்பகுதியில், களுத்துறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பாராளுமன்ற உறுப்பினராகவும் செயற்பட்ட அவர், உள்நாட்டலுவல்கள், வடமேல் மாகாண அபிவிருத்தி மற்றும் காலாச்சாரத்துறை மற்றும் வனஜீவராசிகள் பிரதியமைச்சர்களாகவும் செயற்பட்டுள்ளார்.

பாலித்த தெவரப்பெருமவின் புதைகுழி, அவர் உயிருடன் இருக்கும்போதே அவரால் தயாரிக்கப்பட்டிருந்த விவகாரம், அக்காலகட்டத்தில் பெரும் பேச்சுபொருளாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்றைய தினம் அவர், தனது தோட்டத்தில் பிரிதொரு வேலையில் ஈடுபட்டிருந்த போதே, மின்சாரத் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளார் என்று, விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில், பாலித்த தெவரப்பெருமவின் மூத்த சகோதரரின் மகனான அருண் தெவரப்பெரும கூறியதாவது,

“அவர், அவருடைய சொந்த் தோட்டத்தில், செடிகளுக்கு பசளையிட்டுக்கொண்டிருந்தார். அந்தத் தோட்டத்தின் வெளிச்சத்துக்கு, சில இடங்களின் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டிருந்தது. அந்த மின்குமிழ்களுக்கான மின்சாரம் வழங்கப்பட்டிருந்த மின் வயர் ஒன்று, கீழே கிடந்துள்ளது. அதை அவர், தவறுதலாக மிதித்துவிட்டார். அப்போது அவருக்கு மின்சாரம் தாக்கியுள்ளது. அங்கிழுந்த ஊழியர்கள், உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், வைத்தியசாலை தொலைவில் இருப்பதால், அங்கு சென்றடைய, சுமார் 40 நிமிடங்கள் கடந்துள்ளன. அதனால் அவர் உயிரிழந்துவிட்டார்” என்று, அருண் தெவரப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி