“வடக்கு, கிழக்கிலுள்ள பௌத்த மரபுரிமைகளை அழித்து, அதன் மீது பிற மத அடையாளங்களை வைப்பதை தவிர்த்துக்கொள்ள

வேண்டும். சிங்கள பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனம் என்று கருத வேண்டாம். இது சிங்கள பௌத்த நாடு என்பதால்தான், தமிழ் பிரதிநிதிகள் சுதந்திரமாக வாழ்கிறார்கள்” என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (21) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே, அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றியதாவது,

“சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த, 1987ஆம் ஆண்டு 13ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களித்து நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் செயற்பாட்டுக்கு  ஒத்துழைப்பு வழங்கினார். ஆகவே சபாநாயகரை நாங்கள் பாதுகாப்போம்.

“அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகள் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையின் இரண்டு உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

“நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஜனாதிபதிக்கு அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சட்டம் மற்றும் ஒழுங்கை செயற்படுத்தும் பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம், ஜனாதிபதிக்கு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தால் வழங்கப்படவில்லை.

“19ஆவது திருத்தத்தில் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடியால் பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் பாரிய இழுபறி நிலை ஏற்பட்டது. இந்த நிலைமைக்கு அனைவரும் வெட்கப்பட வேண்டும்.

“வெடுக்குநாறி மலை விவகாரத்தை குறிப்பிட்டுக் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தெற்கில் உள்ள மத சுதந்திரம் வடக்குக்கும் வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார்.

“வடக்கில் மத சுதந்திரம் உள்ளதா என்பதை முதலில் ஆராய வேண்டும். வெடுக்குநாறிமலையில் பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் பொதிந்துள்ளன. வெடுக்குநாறிமலையில் இருந்த  பழமையான பௌத்த தூபி இடித்தழிக்கப்பட்டு, அதன் மீது  சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளவத்தையில் உள்ள கோயிலை இடித்து பௌத்த வழிபாடுகளில் ஈடுபட முடியுமா? ஆகவே தெரியாத விடயங்களை பற்றி எதிர்க்கட்சித் தலைவர் பேசக் கூடாது.

‘வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் பிரதிநிதிகள் தமிழ் மக்கள் மத்தியில் இனவாதம் பேசி பிரச்சினைகளை தூண்டி விடுகிறார்கள். பின்னர் கொழும்புக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். மீண்டும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு செல்கிறார்கள்.

“இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதால் தான் இவர்கள் இவ்வாறு சுதந்திரமாக வாழ்கிறார்கள்.பௌத்த தொல்பொருள் மரபுரிகளை அழித்து அதன் மீது பிற மத அடையாளங்களை காட்சிப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். சிங்கள பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனம் என்று கருத வேண்டாம்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி