இலங்கையில் தமிழ் மக்களின் மரபுரிமைகளைப் காப்பாற்றுவதாக இருந்தால், அதனைக்

காப்பாற்றுவதற்கான அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு இருக்க வெண்டுமென்று, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் இந்தியா மேற்கொண்ட மறுமலர்ச்சிக்கு நன்றிகளும் பாராட்டுகளும் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சு.ஜெயசங்கள் அவர்கள், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மரபுரிமைகளை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அதற்கென்றே வெளிவிவகார அமைச்சில் ஒரு தனிப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும், காசியில் இடம்பெற்ற பாரதியாரின் பிறந்ததின வைபவத்தில் கலந்துகொண்டு பேசும்போது தெரிவித்திருந்தார்.

மேலும், 12 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த மன்னார் திருக்கேதீஸ்வரம் கோயிலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வழிபட்டதன் பின்னர், அந்தக் கோயில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மறுமலர்ச்சி ஏற்பட்டதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அவரது உரையை வரவேற்று, அவருக்கு நன்றி தெரிவித்து சுரேஷ் பிரேமசந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“மரபுரிமைகளைப் பாதுகாக்கும் கடமைகளை இந்தியாவில் மட்டுமன்றி, ஏனைய நாடுகளிலும் இந்தியா செயற்படுத்தி வருகின்றது என, கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார், பலநூறு கோடி ரூபாய்களைச் செலவு செய்து ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கேதீஸ்வரம் சிவாலயத்தை மீட்டெடுத்து புனர்நிர்மாணம் செய்தமையை தமிழ் மக்கள் சார்பாக வரவேற்பதுடன், எமது நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

“இலங்கைத் திருநாடு, இராவணேஸ்வரன் ஆண்ட சிவபூமி என்று அழைக்கப்படுகிறது. இலங்கைத் தீவைச் சுற்றி ஐந்து ஈஸ்வரங்கள் இருந்தன எனத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் கூறுகின்றனர். அவ்வாறான ஒரு நாட்டில், சைவக் கோவில்கள் இடிக்கப்பட்டு, புதிய புதிய பௌத்த விகாரைகள் உருவாக்கப்பட்டு வருகின்ற வேலைத்திட்டத்தை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

“திருக்கேதீஸ்வரத்துக்கு இணையாகப் பாடல் பெற்றுத் திகழும் திருக்கோணேஸ்வரத்தில்கூட இந்த அரசாங்கம் புதிய கட்டடத் தொகுதியை அமைப்பதனூடாக, அதன் புனிதத்தைக் கெடுத்து, அதனை ஒரு சிங்கள பௌத்த பிரதேசமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியத் தூதுவர் அங்கு நேரில் சென்று நிலைமைகளை அறிந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“இதேபோல், முல்லைத்தீவு, வவுனியா போன்ற பிரதேசங்களிலும் புராதன சைவக் கோயில்கள் இருந்த இடங்களில் இருந்து அவை அகற்றப்பட்டு, பௌத்த விகாரைகளை உருவாக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“ஆகவே, இலங்கையில் தமிழ் மக்களின் மரபுரிமைகளைக் காப்பாற்றுவதாக இருந்தால், அதனைக் காப்பாற்றுவதற்கான அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டும். இல்லாவிட்டால், கேதீஸ்வரம், கோணேஸ்வரம் ஆகியவற்றின் அடையாளங்களை எப்படி இலங்கை அரசாங்கம் மாற்ற முற்படுகிறதோ அவ்வாறே ஏனைய இடங்களும் மாற்றப்படும்.

“இன்று, இலங்கை அரசாங்கமானது வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வேறு வழிகளின் ஊடாக தமிழ் மக்களுக்கும் சைவ மக்களுக்கும் உரித்தான மரபுரிமைகளை மறுதலித்து, அவற்றை சிங்கள பௌத்தமயமாக்கும் முயற்சிகளை மேற்கொள்கிறது. அந்த நடவடிக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

“தொல்பொருள் பிரதேசங்களைப் பாதுகாப்பது தொன்மைமிக்க சைவக் கோயில்களைப் பாதுகாப்பது போன்ற அனைத்து உரிமைகளும் அதிகாரங்களும், தமிழ் மக்களுக்குக் கிடைப்பதன் ஊடாகவே அவர்களது மரபுரிமைகள் பாதுகாக்கப்படும்.

“ஆகவே, இந்திய அரசாங்கம் இதனைக் கவனத்திற்கொண்டு, தமிழ் மக்களின் மரபுரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ளும் அதிகாரங்களை அவர்களுக்கப் பெற்றுக்கொடுக்க ஆவணஞ்செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என, சுரேஷ் பிரேமசங்திரன் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி