ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (13) நடைபெற்ற நாடாளுமன்றத்தில் அங்கம்

வகிக்கும் கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பில், இவ்விடயத்தை ஒட்டித் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து முன்வைத்த மூன்று கோரிக்கைகள் தொடர்பிலும், ஓரளவு சாதகமான நிலைப்பாடுகள் பிரதிபலிக்கப்பட்டன என்று, காலைக்கதிர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த மூன்று கோரிக்கைகளையும் ஒட்டி நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையும் அப்பத்திரிகை பட்டியலிட்டுள்ளது.

அந்த வகையில், ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு, காணி அபகரிப்பு நிறுத்தம், அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் ஆகிய விடயங்களை நிறைவேற்றதிகாரமே – ஜனாதிபதி நேரில் கையாண்டு, அடுத்த ஜனவரி மாதத்துக்குள் தீர்வுகளை முன்வைக்க வேண்டும். இது தொடர்பில், சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் ஜனாதிபதி தரப்பே நேரடியாபகத் தொடர்பாடல்களை மேற்கொள்ள வேண்டும் என்பது, முதல் கோரிக்கையாகும்.

இரண்டாவதாக, அரசியலமைப்பிலும் சட்டத்திலும் உள்ள அதிகாரப் பகிர்வு சம்பந்தமான விடயங்களை முழு அளவில் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனவரியில் ஜனாதிபதி ஒதுக்கும் ஒரு திகதியில் மீண்டும் கூடிப் பேசித் தீர்மானங்களை எடுப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் எந்த ஒரு தீர்மானமும் நேற்று எட்டப்படவில்லை. ஜனவரி கூட்டத்தில் இது குறித்து தொடர்ந்து ஆராயப்படலாம் என்று நம்பப்படுகிறது.

மூன்றாவதாக, இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஏற்கெனவே பல மட்டங்களில் பேசியாகிவிட்டது. அவை தொடர்பில் கூடிப் பேசி ஒரு முடிவை எடுத்தால், அந்த முடிவைச் செயற்படுத்தவே கால அவகாசம் தேவைப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட எல்லோராலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, வரும் பெப்ரவரி நான்காம் திகதி சுதந்திர தினத்துக்கு முன்னர், என்ன அடிப்படையில் தீர்வு என்பதை, ஓரிரு தடவைகள் கூடிப் பேசி இறுதி செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் தீர்வை எட்டுவது அல்லது தீர்வு காண்பதற்கான ஒரு முடிவை எட்ட முடியவில்லை என்ற இயலாமையை பெப்ரவரி நான்காம் திகதி 75ஆவது சுதந்திர தினத்தின் போது ஜனாதிபதி அறிவிக்க வேண்டும்.

எனினும், தமிழர் தரப்பின் பிரதான கோரிக்கையான “உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஷ்டித் தீர்வு” என்ற விடயம் குறித்து நேற்று பரிசீலிக்கப்படவில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது.

நல்லிணக்கத்துக்கான சர்வகட்சிக் கூட்டம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை ஜனாதிபதிச் செயலகத்தில் நடைபெற்றது.

பிரதமர் தினேஸ் கணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மஹிந்த ராஜபக்ஷ, இரா.சம்பந்தன், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ஜீ.எல்.பீரிஸ், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உட்பட, நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கட்சிகளின் தலைவர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி