ஐக்கிய தேசியக் கட்சி அல்லது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுடன் இணைந்து அரசியல் பயணத்தை

மேற்கொள்ளவுள்ளார் என வெளியாகும் தகவல்களை ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் இன்று (09) நிராகரித்துள்ளார்.

"மக்கள் பக்கம் நின்று, மக்களுக்கான அரசியலையே  மனசாட்சியின் பிரகாரம் இதுவரை நான் முன்னெடுத்துவந்தேன். இனியும் அதே வழியில்தான் என் பயணம் தொடரும்” எனவும் வேலுகுமார் எம்.பி தெரிவித்தார்.

2023ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு, நாடாளுமன்றத்தில் நேற்று (08) நடைபெற்றது. இதன்போது வேலுகுமார் எம்.பி நடுநிலை வகித்தார். 

தன்னிச்சையான முடிவுகளை எடுத்து தடம்மாறி பயணிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி, மக்கள் வழிக்க வர வேண்டும் என்பதற்காகவே தான் இவ்வாறானதொரு நிலைப்பாட்டை எடுத்ததாக வேலுகுமார் விளக்கமளித்தார்.

எனினும், வேலுகுமாரின் நிலைப்பாடு தொடர்பில் சமூக ஊடகங்களில் பலகோணங்களில் கருத்துகள் உலாவின. ஐக்கிய தேசியக்கட்சி பக்கம் செல்ல போகின்றார் எனவும் இ.தொ.காவுடன் இணையவுள்ளார் எனவும், இதற்கான பேச்சுகள் இடம்பெற்றுள்ளன எனவும் கூறப்பட்டது. இந்நிலையிலேயே அத்தகவல்களை வேலுகுமார் எம்.பி. மறுத்துள்ளார். 

அத்துடன், நடுநிலை தொடர்பான தனது நிலைப்பாட்டை திரிபுபடுத்தி, ராஜபக்ச ஆதரவு, ரணில் ஆதரவு, அரசுக்கான ஆதரவு என முத்திரைக் குத்தி, வதந்திகளை பரப்பி,  அரசியல் சேறுபூசும் பிரச்சாரத்தில் சிலர் ஈடுபட்டுள்ளனர் எனவும், தனது தவறை மூடி மறைப்பதற்காக இப்படியான அநாகரீக அரசியலை முன்னெடுக்கின்றனர் எனவும் வேலுகுமார் எம்.பி சுட்டிக்காட்டினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி