அரச படைகளால் 38 வருடங்களுக்கு முன்னர் சமூகப் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழர்களின்

நினைவு தினம், முல்லைத்தீவு ஓதியமலை பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது.

மேற்படி 32 பேரும், ஓதியமலை கிராமிய அபிவிருத்தி மண்டபத்துக்கு அழைக்கப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட நிலையில், 1984ஆம் ஆண்டு டிசெம்பர் 02அம் திகதி படுகொலை செய்யப்பட்டனர்.

இவ்வாறு அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்துக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில், அவர்களின் உறவினர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன், அக்கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் விசேட பூஜையும் நடத்தப்பட்டதாக, அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஒதியமலை சமூகப் படுகொலையானது, 1984ஆம் ஆண்டு டிசெம்பர் ஆரம்பம் முதல் இரண்டு வாரங்களில் முல்லைத்தீவு - திருகோணமலை மாவட்டங்களின் எல்லைப்பகுதி தமிழ்க் கிராமங்களை மையப்படுத்தி நடத்தப்பட்ட சமூகப் படுகொலைகளில் ஒன்றாகும்.

கொக்கிளாய், தென்மரவாடி, அமரவயல், கொக்குத்தொடுவாய், அளம்பில், நாயாறு, குமிழமுனை மற்றும் மணலாறு தாக்குதல்களுடன் கூடிய தாக்குதல் கிராமமாகவே இது காணப்படுகிறது.

இந்தத் தாக்குதல்களுக்கான காரணம் சிங்களக் குடியேற்றமே என்று அப்போதைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

தங்களுடைய சொந்தக் கிராமங்களை விட்டுச் சென்ற மக்களை மீளக்குடியேற்றவே அல்லது இழந்த உயிர்களுக்கு நியாயமோ இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்று, ஓதியமலை நினைவுதினத்தில் கலந்துகொண்டிருந்த மக்கள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலுக்குக் கட்டளையிடும் அதிகாரியாகச் செயற்பட்டவர் பிற்காலத்தில் மேஜர் ஜெனரல் பதவிநிலை வகிக்கும் அப்போதைய பிரிகேடியர் ஜானக்க பெரேரா ஆவார்.

இந்தத் தாக்குதலின் பின்னர் உருவாக்கபட்ட சிங்களக் குடியேற்றக் கிராமத்துக்கு ஜானக்கபுரய என்றும் பெயரிடப்பட்டது.

வடமத்திய மாகாண முதல்வராக ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா, அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி