தாய்லாந்தின் மத்தியப் பகுதியிலிருக்கும் பௌத்த விஹாரை ஒன்றில் இருந்த அனைத்து பிக்குகளும்

போதைப்பொருள் பாவனை தொடர்பான பரிசோதனையில் தோல்வியடைந்தமையால், அவர்கள் அனைவரும் மதக்கடமைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அங்கு மதக்கடமையிலிருந்த நான்கு பிக்குகளிடம் நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் மெத்தாம்பெட்டமைன் எனும் போதைப்பொருளைப் பாவித்திருந்தமை தெரியவந்தது. இதையடுத்து, அந்த நான்கு பிக்குகளும் வைத்திய பரிசோதனை மற்றும் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள் என அந்நாட்டு அதிகாரியான பூன்லெர்ட் திண்டபதி கூறியுள்ளார்.

பிக்குமார் மீதான நடவடிக்கை காரணமாக, பெட்சாபுன் மாகாணத்தில் புங் சாம் பான் என்ற மாவட்டத்திலுள்ள அந்தச் சிறிய பௌத்த விஹாரையின் அனைத்து மத வழிபாடுகளும் முற்றாகத் தடைபட்டுள்ளன.

“அந்த விஹாரையில் இப்போது வழிபாடுகளை நடத்த பிக்குகள் இல்லை, அதனால் அருகிலிருக்கும் கிராமங்களைச் சேர்ந்த மக்களால், தமது நன்னெறிகளில் ஒன்றான பிக்குகளுக்கு தானங்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையால் அவர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்” என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

மக்களின் கவலையை அடுத்து, வேறு விஹாரைகளிலிருந்து பிக்குகளை அங்கு அனுப்ப ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் பூன்லெர்ட் திண்டபதி அறிவித்துள்ளார்.

மாகாணத்தின் தலைமை பௌத்த தேரருடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாய்லாந்தில் பௌத்த பிக்குகள் முறைதவறி நடந்துகொள்வது இது முதல் முறையோ அல்லது ஒரு தனியான சம்பவமோ அல்ல. அவர்கள் பொது வெளியில் பல சந்தர்ப்பங்களில் மோசமாக நடந்துகொண்டுள்ளமை ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மைக் காலங்களில் தாய்லாந்தில் உயர்நிலைகளில் உள்ள பிக்குகள் ஊழல்கள், கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவை தொடர்பில் பாரதூரமான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டனர்.

இந்தாண்டு மார்ச் மாதம் தனக்கு அமானுஷ்ய சக்தி இருப்பதாக சுயபிரகடனம் செய்து கொண்ட லுஆங் பு துனச்சாய் என்ற பிக்கு, மது போதையில் வாகனம் செலுத்தியதற்காகவும் போதைப் பொருள் வைத்திருந்ததற்காகவும் கைது செய்யப்பட்டு, பின்னர் அவர் மதப் பணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

அவரிடமிருந்து ஏராளமான மெத்தாம்பெட்டமைன் மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. முன்னதாக இந்த வருடம் ஜனவரி மாதம் மற்றொரு பிக்கு ஒருவர், இளைஞர்களுக்கு மெத்தாம்பெட்டமைன் மாத்திரைகளை விற்பனை செய்ததோடு, பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த காவி உடையும் பறிக்கப்பட்டது.

சில பிக்குகளின் இவ்வாறான நடவடிக்கைகள் பௌத்த மதத்துக்கும் நாட்டுக்கும் அவப்பெயரை ஏற்படுத்துவதாகத் தீவிர பக்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அவர்களின் நடவடிக்கைகள் மூலம் பௌத்த மதத்தின் மீதான நம்பிக்கை சீர்குலைந்து போவதாகவும் நாட்டில் உள்ள பௌத்த விஹாரைகள் சீர்திருத்தப்பட வேண்டும் எனவும் தேசியளவில் இப்போது குரல்கள் எழுந்துள்ளன.

பௌத்த மடாலயங்கள் மற்றும் விஹாரைகளில் இருக்கும் சில தீய சக்திகள் களையெடுக்கப்பட வேண்டும் என அந்நாட்டு தேசிய பௌத்த சங்கம் தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி