மத ரீதியிலான கருத்துக்களை ஏளனம் செய்வது தொடர்பில் கடந்த காலங்களில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ள போதிலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சாதாரண சட்டத்தின் கீழாவது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென முன்னிலை சோஷலிஸக் கட்சி குற்றஞ் சாட்டுகிறது.

கடந்த மார்ச் 19ம் திகதி நுகேகொட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கும் போதே முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட மேற்கண்டவாறு கூறினார். மேலும் கருத்து தெரிவித்த அவர் “இந்த பயங்கர நிலைமையை தோற்கடிக்க வேண்டுமெனவும், அதற்காக தமது கட்சி தலையீடு செய்யுமெனவும் கூறினார். மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் மார்ச 12ம் திகதி வெளியிடப்பட்ட 2218/68 அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 2021 இலக்கம் 1ன் கீழ் பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டவிதிகளை அமுல்படுத்தியுள்ளார். தீவிர மதக் கருத்துக்களைக் கொள்வதிலிருந்து சமூகத்தை மீட்கும் கட்டளைகள் என்ற பெயரல் இந்த விதிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. மாத்திரமல்ல, இனவாத மோதல்கள், மத மோதல்களை உண்டாக்கும் வகையில் யாதொரு தரப்பினரை அவமதிக்கும் பொருள்கோடலில் எழுதும், சித்திரம் வரையும், பேசும், அது குறித்து கருத்து தெரிவிப்பவர்களை இலக்காகக் கொண்ட சட்டவிதிகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் கைது செய்தல் அல்லது சரணடைதல் நடக்கும் பட்சத்தில், நீதிபதியின் முன்பாக பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்படும் சந்தேக நபர்களை வழக்கு விசாரணையின்றி ஒரு வருடத்திற்கு மேற்படாத காலத்திற்கு நீதிபதியினால் புணர்வாழ்விற்கு அனுப்ப முடியுமென்பது தெரிய வருகிறது.

பொதுவாக இத்தகைய சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு சார்பாக முன்வரும் சட்டமா அதிபர் ஒரு தரப்பினது விடயத்தில் மாத்திரம் கருத்து தெரிவிப்பது நியாயமாக இருக்காது. சந்தேக நபர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி தனது தரப்பு சம்பந்தமாக விளக்கமளித்து நீதியை நிலைநாட்டுவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல, சட்டவிதிகளின் 7வது உறுப்புரையில் உள்ளவாறு விடுதலை செய்யவோ, 6 மாதத்திற்கு இருமுறை நீடிப்பதற்கோ பாதுகாப்பு அமைச்சருக்கு முடியும்.

இந்த சட்ட விதிகளின் மூலம் உணர்த்தப்படுவது என்ன? கைது செய்த நபரை, வழக்கு விசாரணையின்றி இரண்டு வருடங்கள் சிறையில் வைத்திருக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்குக் கிடைக்கிறது. இந்த சட்டவிதிகளை அமுல்படுத்துவதே அரசியலமைப்பை மீறுவதாகும். நியாயமான காரணமின்றி கைது செய்யப்படுவதை தடுக்கும் உரிமை ஒரு குடிமகனுக்குரிய உரிமையாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த சட்டவிதிகள் ஊடாக ஆட்களை நினைத்தவாறு கைது செய்து வழக்கு விசாரணையின்றி சிறைப்படுத்தும் தேவை வெளிப்படுகிறது. இதுவொரு பயங்கர நிலையாகும்.

ஒரு சந்தேக நபரை வழக்கு விசாரணையின்றி சிறைப்படுத்த, சட்டமா அதிபரின் பரிந்துரை மாத்திரமே நீதிபதிக்குத் தேவை. சட்டமா அதிபரின் பரிந்துரை என்பது, அவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஒருவர் என்பதால் அத்தகைய ஒருவரின் தீர்மானமானத்தை ஜனாதிபதியின் தீர்மானமாகக் கருத முடியும். அமைச்சரின் முடிவு என்பது பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் அல்லது ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஒருவரின் முடிவாகும். எனவே, இத்தகைய பயங்கர சட்ட நடவடிக்கைகளை ரத்துச் செய்ய வேண்டுமென, முன்னிலை சோஷலிஸக் கட்சி என்ற வகையில் அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கிறோம்.

விசேடமாக இது முழு சமூகத்திற்கும்;, அரசாங்கக் கட்சியினர் உட்பட சகலருக்கும் ஆபத்தானதாகும். உதாரணமாக, கடந்த யுத்த காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் வழக்கு விசாரணையின்றி சுமார் 25 வருடங்களாக சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இப்போதும், அதே போன்றதொரு தான்தோன்றித்தனமான ஆட்சிக்கு வழி சமைக்கப் பார்க்கிறார்கள். மாற்றுக் கருத்துக்களை கொண்டுள்ளவர்களை அடக்கும் இவ்வாறான முயற்சிகள் எமது சமூகத்தில் உள்ள குறைந்தபட்ச சுதந்திரத்தையும் பறிப்பதாக இருக்கும்.

எனவே, இந்த பயங்கர நிலையை தோற்கடிக்க எமது கட்சியானது சட்டபூர்வமான, அரசியல் ரீதியிலான மற்றும் ஆர்ப்பாடட் முறைகளின் ஊடாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறது. இந்த ஆபத்தைத் தோற்கடிக்க ஒன்றிணையுமாறு ஜனநாயகத்தையும், மானுட சுதந்திரத்தையும் மதிக்கும் அனைத்து மக்கள் சக்திகளிடமும் வேண்டிக் கொள்கிறோம்”.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி