மட்டக்களப்பில் மண்கொள்ளையை பார்வையிடச்சென்ற இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை செல்ல விடாமல் வழிமறித்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடிப்பிரதேசத்தின் மேற்கே இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக  (19)வெள்ளிக்கிழமை நடைபெற்ற செங்கலடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்திலும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

த.தே.கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் கோ.கருணாகரம்(ஜனா) ஆகியோர் அச்சுறுத்திய சம்பவத்தை சுட்டிக்காட்டி மண்கொள்ளையின் பாராதூரத்தை எடுத்துரைத்தனர்.

மாவட்ட எல்லையிலுள்ள மேய்ச்சல் காணி ஒரு பக்கம் பறி போவதும் மறுபக்கம் எல்லையில்லாமல் ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் குறிப்பாக கிரான் செங்கலடி பிரதேச செயலகத்திலுள்ள மண்வளங்களை வெளிமாவட்டங்களுக்கு விற்று பணமாக்கும் மண்மாபியாக்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை பற்றி பரவலாக செய்திகள் வருகின்றன.

இப்பிரச்சினை ஒவ்வொரு பிரதேச செயலகங்களின் அபிவிருத்தி கூட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் கோ.கருணாகரம் (ஜனா) ஆகிேயோர் பிரஸ்தாபித்து வருகின்றனர்.

இதனைத் தடுத்து நிறுத்தும்படி பொலிஸாருக்கும் பிரதேச செயலகத்திற்கும் அறிவித்தும் வருகிறார்கள்.

நேற்று முன்தினம் செங்கலடி பதுளை வீதியில் பாலமடு அண்டிய இழுப்படிச்சேனை அண்மித்த கிராமங்களான வேப்பவெட்டுவான் ,மகிழவெட்டுவான் செல்லும் கிராமங்களை அண்டிய இடங்களில் புதிய ஆறு ஒன்று தோண்டப்படுவதாக பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன்,ஜனா ஆகியோரிடம் முறையிட்டனர்.

அதன்படி அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.மண் அகழ்ந்து அகழ்ந்து பாரிய சமுத்திரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதைக் கண்டார்கள்.

அப்பிரதேசத்தைச்சுற்றிப்பார்வையிடச்சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களை மேலும் செல்ல விடாமல் தமது டிப்பர் இரண்டினால் வழியை மறித்து சிலர் அட்டகாசம் செய்துள்ளதாகத் தெரிகிறது.

பிரதேசவாசிகள் கூறுகையில்  எமது ஊரை காப்பாற்றுங்கள். எங்கோ வெளியூரிலிருந்து வந்தவன் இங்குள்ள மண் வளத்தை அள்ளி போகிறான். இனத்தை அழித்தது போதாது என்று தற்போது எங்களது மண்வளத்தை அழித்து எங்களது இருப்பை மாற்றி வருகிறார்கள்.

தினமும் நூற்றுக்கணக்கில் லொறிகளில் கொழும்பு போன்ற பிரதேசங்களுக்கு மண் கொண்டு செல்லப்படுகின்றன. இதையிட்டு அரச அதிபர் முதல் அரசியல்வாதிகள் வரை கவனம் எடுத்து எமது மண்வளத்தைப் பாதுகாக்கவேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

இதேவேளை இறுதியாக நேற்று முன்தினம் (19) செங்கலடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் இப்பிரதேசத்தில் மண் அகழ்வது உடனடியாக தடைசெய்யப்படும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி