யாழ்ப்பாணம் செம்மணியில் இன்று ஆரம்பமாகவுள்ள 'அணையா விளக்கு' போராட்டத்தில்
கட்சி பேதங்களைக் கடந்து நீதிக்காக அனைவரையும் அணி திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி தொடர் போராட்டமொன்று செம்மணியில் இன்று காலை ஆரம்பமாக உள்ளது. தொடர்ந்து இந்தப் போராட்டம் மூன்று தினங்கள் இரவு பகலாக நடைபெறவுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு அணையாத தீபம் ஏற்றப்படும். அந்த தீபத்தை, தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தியின் உறவினர், மதத் தலைவர்கள் ஏற்றி வைப்பர். தொடர்ந்து மலர் வணக்கம் இடம்பெறும்.
இன்று மாலை நிகழ்வாக செம்மணி தொடர்பான கதை வாசிப்பு அங்கு இடம் பெறும். இரவு நிகழ்வாக ஆவணப்படம் திரையிடப்படும்.
செம்மணிச் சந்தையில் நின்று, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களுக்காக சர்வதேசத்திடம் நீதி கேட்டு சர்வதேசத்தை அழைக்கும் அணையா விளக்குப் போராட்டத்திற்கு அனைவரையும் வருகை தருமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
இப் போராட்டத்திற்கு பல்வேறு பொது அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் தமது முழு ஆதரவை வழங்கியுள்ளமையுடன் அனைவரையும் அதிக் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி கோருகின்ற இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தமிழ் மக்களும் பங்காளிகளாக இணைந்து கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.