அமெரிக்காவுக்கு பெரும் அழிவு காத்திருக்கிறது என்று, ஈரான் தலைவர் காமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, காசா மீது ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓய போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்து உள்ளார்.
இந்த சூழலில், ஈரான் நாடும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் குடியிருப்புகளை இலக்காக கொண்டு, 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலும் அதற்கு பதிலடி கொடுத்தது. இதனால், போர் மூளும் அபாயம் காணப்பட்டது.
எனினும், இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் தணிந்திருந்த சூழலில், திடீரென ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதனால், 2 நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இதுபற்றி ஈரான் தலைவர் காமேனியின் பிரதிநிதி கூறும்போது, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது தாக்குவோம். தாமதமின்றி உடனே தாக்குதல் நடத்த இதுவே சரியான தருணம் என தெரிவித்து உள்ளார். ஆனால், ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால், அதனை விட அதிக பலத்துடன் நாங்கள் தாக்குவோம் என டிரம்பும் எச்சரித்து உள்ளார்.
ஈரானிய ஆதரவு பெற்ற போராளி அமைப்புகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ள சூழலில், பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதரக பகுதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஈராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகங்களில் உள்ள தூதரகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
அமெரிக்காவுக்கு ஆதரவாக அனைத்து வகையிலும் துணை நிற்போம் என இஸ்ரேலும் தெரிவித்து உள்ளது. இதுவரை ஈரான் நடத்திய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 470 டிரோன்களை தாக்கி அழித்து விட்டோம் என இஸ்ரேல் கூறியுள்ளது. இதனால், அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல், ஈரான் நாட்டை எதிர்கொள்ள தயாராக உள்ளது.