ஜனாதிபதியின் பொது மன்னிப்பு கிடைத்ததாக பொய்யான அடிப்படையில் கைதியொருவரை விடுவித்த குற்றச்சாட்டில்,
அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சர், குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டது.
40 இலட்சம் ரூபாவை மோசடி செய்தமைக்காக, அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி ஒருவரை விடுதலை செய்ய உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
சம்பந்தப்பட்ட கைதி ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளதாக, சம்பந்தப்பட்ட அத்தியட்சகர் வட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதன்படி, நீதிமன்றத்தால் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட டபிள்யூ.எம். அத்துல திலகரத்ன என்ற குற்றவாளி, மே 12ஆம் திகதி வெசாக் பௌர்ணமி நாளில், ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சிறைச்சாலை அத்தியட்சகரின் வாக்குமூலத்தை கருத்திற்கொண்ட வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாவசம், குற்றவாளிகளை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர், இன்றைய தினம் அநுராதபுரம் பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.