யாழ். செம்மணியில் நேற்றும் தொடர்ந்த அகழ்வுப் பணியில் மேலும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணியில் இரண்டாம் கட்டமாக மூன்றாம் நாளான நேற்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, மூன்றாவது எலும்புக்கூட்டுத் தொகுதி பிரித்தெடுக்கப்பட்டு பொதியிடப்பட்டு சட்ட மருத்துவ அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது
நீதிவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இந்த அகழ்வுப் பணி நேற்று இடம்பெற்றது. இன்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழியில் சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இன்று கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
செம்மணிச் சந்தியில் இன்று காலை 10 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும், இந்தப் போராட்டத்துக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் கேட்டுள்ளது.
கிளிநொச்சியிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கப் பணிமனையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே சங்கத்தின் தலைவி யோ.கலாரஞ்சினி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“காலத்துக்கு காலம் பல்வேறு மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அவ்வாறே கைவிடப்பட்டுள்ளன. எனவே, தற்போது யாழ். அரியாலை, செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி சர்வதேசக் கண்காணிப் பின் கீழேயே அகழப்பட வேண்டும்." - என்றார்.