பாணந்துறை - ருக்ஹஹா திசையில் இருந்து பயணித்த முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட
3 வயது ஆண் குழந்தையொன்று, அவ்வழியாகப் பயணித்த பஸ் ஒன்றில் மோதுண்ட நிலையில் உயிரிழந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த குழந்தையின் தாய், இன்று (30) பிற்பகல் 1.30 மணியளவில், தனது சகோதரியின் மகளுக்கு காது குத்துவதற்காக, மாலமுல்லா பகுதியில் உள்ள ஒரு விகாரைக்குச் சென்றுள்ளார்.
இதற்காக, அந்தத் தாய், அவரது சகோதரி, 3 வயதுச் சிறுவன், அச்சிறுவனின் 10 வயதுச் சகோதரன் மற்றும் காது குத்துவதற்காகக் காத்திருந்த சிறுமி ஆகியோர், முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளனர்.
இதன்போது, பாணந்துறையின் ருக்கஹா பகுதியில் பயணிகள் இறங்குவதற்காக பஸ் ஒன்று நிறுத்தப்பட்டிருந்த நிலையில், பின்தொடர்ந்து வந்த லொறி ஒன்று, பஸ்ஸை முந்திச் செல்ல முயன்றது.
அந்த நேரத்தில், பஸ்ஸுக்கு எதிர்முனையில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் சாரதி பிரேக் போட்டதால், முச்சக்கர வண்டியில் இருந்த மேற்படி 3 வயதுக் குழந்தை தூக்கி வீசப்பட்ட நிலையில், எதிரே வந்துகொண்டிருந்த பஸ்ஸில் மோதியுள்ளது.
பஸ் ஓட்டுநர், அந்த விபத்தை எதிர்பார்க்காத நிலையில், பஸ்ஸை தொடர்ந்து ஓட்டியுள்ளார். விபத்தில் இறந்த குழந்தை பாணந்துறை - அருக்கொட, பொன்சேகா மாவத்தையைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.