அடுத்த 36 மணி நேரத்தில், மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை
மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
நிலவும் மோசமான வானிலை காரணமாக இன்று (30.05.2025) மாலை 4 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மின் தடையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,451 ஆகும். இந்த மின் முறிவுகளை சரிசெய்ய விரைவாக செயற்பட்டு வருவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (30) பிற்பகல் பெய்த கனமழையால் ஏற்பட்ட பேரழிவில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த ஐவரும் தற்போது சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மழையின் போது வீசிய பலத்த காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்து சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு விஜேராம மாவத்தை, கொழும்பு ஹோர்டன் பிளேஸ், மைட்லேண்ட் பிளேஸ், கொழும்பு 02 நவம் மாவத்தை உள்ளிட்ட பல பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. இதன் காரணமாக, போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெய்துவரும் கடும் மழை காரணமாக 21 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (இடர் முகாமைத்துவ பிரிவு) கே.ஜி. தர்மதிலக்க தெரிவித்தார்.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேலும் தெரிவிக்கையில், இதுவரை 21 மாவட்டங்களை உள்ளடக்கிய 219 பிரதேச செயலக பிரிவுகளில் 2,249 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், இந்த அனர்த்த நிலைமை காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 24 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த அனைவருக்கும் அரசாங்கத்திடமிருந்து இழப்பீடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தர்மதிலக்க மேலும் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலக்க,
"இந்த 21 மாவட்டங்களில் 219 பிரதேச செயலக பிரிவுகள் அனர்த்த நிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த 219 பிரதேச செயலக பிரிவுகளில் 2,249 குடும்பங்களைச் சேர்ந்த 8,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் காற்று நிலைமைகளால் பெரும்பாலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, மண்சரிவுகளும் பாறைகள் உருண்டு விழுந்தமையும் இதில் அடங்கும்.
“கடந்த 14ஆம் திகதி முதல் இன்று பிற்பகல் 10 மணி வரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த ஒருவருக்கு 10 இலட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்குவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். அதேபோல், 24 பேர் காயமடைந்துள்ளனர். இந்த காயமடைந்தவர்கள் ஏதேனும் ஊனமுற்ற நிலைக்கு உள்ளாகினால், அவர்களுக்கும் இழப்பீடு வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
“அதேபோல், இந்த நிலைமையில் முழுமையாக சேதமடைந்த 07 வீடுகள் இதுவரை எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 07 வீடுகளுக்கு தலா 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். பகுதியளவு சேதமடைந்த 2,053 வீடுகள் எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மீளமைப்பு செய்து, அதற்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
“மேலும், 08 சிறு வியாபாரங்கள் சேதமடைந்துள்ளன. அதேபோல், 31 உள்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளன. இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே எங்களுக்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த வீடுகளின் சேதங்களை மதிப்பீடு செய்தவுடன், அந்தத் தொகையை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம்” என்றார்.
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. முக்கிய மார்க்கங்களிலும் களனிௌி மார்க்கத்திலும் பல ரயில்கள் இவ்வாறு தாமதமாக இயக்கப்படுவதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நுவரெலியா பம்பரகலை தோட்டத்தில் இன்று (30) வீசிய கடும் காற்று காரணமாக 4 வீடுகள் சேதமடைந்துள்ளன. தற்போது மழையுடன் வீசும் காற்றின் வேகம் காரணமாக குறித்து நான்கு வீடுகளில் கூரைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை அப்பகுதி கிராம அலுவலகர்கள் ஊடாக தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டு பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் நுவரெலியா மாவட்ட செயலக்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பலத்த மழை மற்றும் காற்று நிலைமைகளால் திடீரென ஏற்படக்கூடும் மின் விநியோகம் தடைபட்ட சம்பவங்கள் குறித்து அறிவிக்குமாறு இலங்கை மின்சார சபை தனது பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.
அதன்படி, மின்சார சபையின் கைப்பேசி செயலி (mobile app) அல்லது இணையதளத்திற்கு சென்று மின் விநியோக தடைகள் குறித்து அறிவிக்குமாறு அந்த சபை பொதுமக்களிடம் கோரியுள்ளது. கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு பொது மக்கள் மின் விநியோக தடைகள் குறித்து அறிவிக்க முடியும்.