“இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை நிகழவில்லை என்று கூறுபவர்கள் மகா
பொய்யர்கள். இவ்வாறு கூறுபவர்கள் கனடாவில் எவரும் இருந்தால், நீங்கள் கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள்" என்று கூறி, கனடாவின் பிரம்டன் நகரபிதா பெற்றிக் பிரவுண்னினால் 'முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி' திறந்துவைக்கப்பட்டமை, சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
கனடாவில் வசிக்கும் தமிழர்கள் சிலர் அந்நாட்டின் பிரம்ப்டன் நகரில், விடுதலை புலிகள் அமைப்பின் ஈழம் வரைபடத்தை உள்ளடக்கிய தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் ஒன்றை திறந்து வைத்த வீடியோ ஒன்றும், சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
இது தொடர்பாக, கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடமிருந்து அறிக்கை ஒன்றை கோருவதற்கு எதிர்பார்ப்பதாக, வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது.
கனடாவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் சிலரால் பிராம்ப்டன் நகரில் கட்டப்பட்ட நினைவுச்சின்னம் ஒன்று தொடர்பாக, தற்போது சமூக ஊடகங்களில் பல வீடியோக்கள் பரவி வருகின்றன.
சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட பதிவுகளில், 2021ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பாக இந்த நினைவுச்சின்னம் கட்டப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கனேடிய தமிழ் தேசிய கவுன்சில் உள்ளிட்ட கனடாவில் உள்ள தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னம், விடுதலை புலிகள் அமைப்பு உருவாக்கியதாகக் கூறப்படும் தமிழீழ வரைபடத்தையும் உள்ளடக்கி நிறுவப்பட்டுள்ளதை காணமுடிகிறது.
அந்த நினைவுச்சின்னத்தை திறந்து வைக்கும் நிகழ்வில், ஒன்ராறியோவின் பிரதி அமைச்சராகவும், இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்த விஜே தணிகாசலம் என்பவரும் கலந்துகொண்டிருந்ததை சமூக ஊடகங்களில் பரவிய வீடியோக்களில் காணமுடிந்தது.