முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைத்தமை தொடர்பில்,
இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகச் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்த விடயங்கள் பொய்யானவை என்று, முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் அறிவித்துள்ளது.
இன்றை ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், “ரணில் விக்கிரமசிங்க அவர்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்த பின்னர், ஏப்ரல் 11ஆம் திகதியன்று செல்ல முடியாது” என்று, தனது சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்தார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
11ஆம் திகதி வருவதற்கு வாய்ப்பில்லை என்றும், 17ஆம் திகதி ஆணைக்குழுவிற்கு வருவதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியதாக, அமைச்சரவை ஊடக சந்திப்பில் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், ஏப்ரல் 12 அன்று மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, “முன்னாள் ஜனாதிபதியால் 17ஆம் திகதி வர முடியாதாம், அவர் சித்திரைப் புத்தாண்டு கொண்டாடுவதாகவும் ஒரு கடிதத்தைக் கண்டதாகக் கூறியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு ஒருபோதும் அறிவிப்பு கடிதத்தை சமர்ப்பிக்கவில்லை என்று ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவில் ஆஜராகும் திகதியை ஒத்திவைக்கக் கோரி, முன்னாள் ஜனாதிபதியின் வழக்கறிஞர் ரொனால்ட் பெரேராவே கடிதம் அனுப்பினார் என்றும் ஏப்ரல் 17ஆம் திகதிக்குப் பதிலாக ஏப்ரல் 28ஆம் திகதிக்குப் பின்னரான திகதியை வழங்குமாறே அதில் கோரப்பட்டிருந்ததாகவும், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஏப்ரல் 11 என்று திகதியிட்ட கடிதத்தின்படி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட போதிலும், ஏப்ரல் 21ஆம் திகதியன்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் முன்னாள் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், 2023ஆம் ஆண்டு 09ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றச்சாட்டும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 25ஆம் திகதியன்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அனுப்பிய கடிதத்தில், முன்னாள் ஜனாதிபதி தேவையில்லாமல் தலையிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 11ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பப்பட்ட கடிதம், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் அசித்த என்டனி அனுப்பியிருந்த போதிலும், அதன் பின்னரான இரண்டு கடிதங்களும், ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆர்.எஸ்.ஏ. திசாநாயக்கவினாலேயே அனுப்பப்பட்டிருந்ததாகவும், அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.