இந்தியாவில் நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கு குறித்த 20 முக்கிய தகவல்களின் தொகுப்பு. மே 17 வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும்.

பச்சை, சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களுக்கு வெவ்வேறு விதிகள் உள்ளன.

கடந்த 21 நாட்களாக தொற்று உண்டாகாத பகுதிகள், பச்சை மண்டலங்கள் ஆகும்.

தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் மற்றும் பரவல் அதிகமாக உள்ள மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்கள் ஆகும்.

இந்த இரண்டு மண்டலங்களுக்குள்ளும் சேராத பகுதிகள் ஆரஞ்சு மண்டலங்கள் ஆகும்.

1.கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு, மே மாதம் 4ஆம் தேதி தொடங்கி, மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்கப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

2.கொவிட்-19 தொற்று மிதமாக மற்றும் குறைவாக உள்ள ஆரஞ்சு மற்றும் பச்சை குறியீட்டு மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3.பச்சை மண்டல பகுதிகளில் 50% பயணிகளுடன் பேருந்தை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களில் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்படாது.

4.ஆரஞ்சு மண்டல பகுதிகளில் நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் இருவர் பயணிக்கலாம். சிவப்பு மண்டலங்களில் ஓட்டுநர் மற்றும் ஒருவருக்கு மட்டுமே அனுமதி உண்டு.

5.சிவப்பு மண்டலங்களில் பேருந்து, ஆட்டோ மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்களை இயக்க அனுமதி இல்லை. இரு சக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே சிவப்பு மண்டலத்தில் பயணிக்க முடியும்.

6. தொற்று அதிகம் உள்ளதாக அறியப்பட்டுள்ள 'கட்டுப்பாட்டுப் பகுதிகள்' என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் உள்ளே மற்றும் வெளியே செல்வோர் குறித்த தகவல்கள் பதிவு செய்யப்படும். அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு மட்டுமே வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

7. சிவப்பு மண்டல மாவட்டங்களின் கிராமப்புற பகுதிகளில் கட்டுமாணம் மற்றும் தொழிற்சாலைகள்  இயங்க அனுமதி உண்டு.

8. சிவப்பு மண்டலங்களில் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே, நகர்ப்புற பகுதிகளில் வர்த்தக வளாகங்களில் இல்லாமல் தனியாக இருக்கும் கடைகள் அனைத்தும் இயங்க அனுமதி உண்டு. அங்கு சமூக இடைவெளி கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். ஊரகப் பகுதிகளில் அனைத்து கடைகளும் இயங்கலாம்.

9.சிவப்பு மண்டல மாவட்டங்களில் 33% ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்கலாம்.

10.விமானம், ரயில் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான சாலைப் போக்குவரத்துக்கான தடை தொடர்ந்து அமுலில் இருக்கும்.

11.உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளபடி அத்தியாவசிய தேவைகள், மருந்துகள் மற்றும் மருத்துவ கருவிகள், உணவுப் பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டும் விமான, ரயில் மற்றும் சாலை போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

12.பள்ளிகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள், விடுதிகள் ஆகியவை இயங்குவதற்கான தடையும் நீடிக்கிறது.

13.இதுவரை இருந்ததைப் போலவே சமூக, மத மற்றும் அரசியல் கூட்டங்களுக்கும் அனுமதி கிடையாது.

14.கோவிட்-19 தொற்று இருப்பதை கண்டறிய உதவும் 'ஆரோக்கிய சேது' எனும் செல்பேசி செயலியை கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் இருப்பவர்கள் தரவிறக்கம் செய்வதை உள்ளூர் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

15.காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு காரணங்களுக்காக யாரும் வெளியே நடமாட அனுமதியில்லை.

16.பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் தொழில்கள், கடைகள் உள்ளிட்டவை இயங்க அனுமதி உண்டு.

17.பச்சை, சிவப்பு, ஆரஞ்சு என அனைத்து மண்டலங்களிலும் 65 வயதுக்கும் அதிகமானவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள், வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆகியோர் மருத்துவக் காரணங்களைத் தவிர வேறு காரணங்களுக்காக வெளியே வரக்கூடாது.

18.பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் இரு சக்கர வாகனங்களில் இருவர் பயணிக்க அனுமதியுண்டு.

19 . சிவப்பு மண்டலங்களில் கட்டுப்பாட்டு பகுதிகளில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனப் போக்குவரத்துக்கு, சலூன், அழகு நிலையம் மற்றும் கடைகள் இயங்க அனுமதி இல்லை.

20.தேசிய எல்லையில் அமைந்துள்ள மாநிலங்கள் அண்டை நாடுகளில் இருந்து சாலை வழியாக வரும் அத்தியாவசிய தேவைகளுக்கான சரக்குகளை சுமந்து வரும் வாகனங்களுக்கு பிரத்யேக அனுமதி தேவை இல்லை.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி