சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம்

இன்று (07) மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த அமைச்சரவைப் பத்திரம் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

வறட்சியான காலநிலை காரணமாக உடவளவ நீர்த்தேக்கத்தில் நீர் வற்றி வருவதால் வளவ பிரதேச விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.

இதற்கு தீர்வாக சமனல ஏரியின் நீரை பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை கடந்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்க விவசாய அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்த பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதங்கள் எழுந்துள்ளதுடன், இது தொடர்பான பிரேரணை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

சமனல ஏரி நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வழங்குவதற்கு சில தரப்பினர் நேரடியாக தயக்கம் காட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சமனல குளத்தில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரைப் பெற்றுக் கொள்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதேவேளை, உடவளவ நீர்த்தேக்கத்திற்கு நீர் திறந்துவிடப்படாமையால் விவசாயிகள் படும் இன்னல்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய அகில இலங்கை கமநல சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

வளவ பிரதேச விவசாயிகளின் நீர் பிரச்சினையை தீர்ப்பதில் அரசாங்கம் தொடர்ந்தும் காலதாமதம் செய்து வருவதனால் இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்ய தீர்மானித்ததாக அதன் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்காலத்தில் விவசாய ஹர்த்தாலை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தேசிய விவசாய சங்கத்தின் தலைவர் அனுராதா தென்னகோன் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த நீர்ப் பிரச்சினை நாட்டின் பொருளாதாரத்தை நேரடியாகப் பாதிப்பதால், நீதித்துறைக்கு தலையிடும் வாய்ப்பு காணப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி மயூர குணவங்ச தெரிவித்தார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி