ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் சிங்கள பிரபல நடிகை தமிதா அபேரத்னவை கொம்பனித்தெரு பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட தமிதா அபேரத்னவை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (08) உத்தரவிட்டுள்ளார்.

நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய சம்பவம் தொடர்பில் பிணையில் இருக்கும் போதே சந்தேகநபர் மீண்டும் கைதுசெய்யப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகநபர் ஜூலை 14ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசித்து குற்றமிழைத்துள்ளதாகக் கூறி கொம்பனித்தெரு பொலிஸார் கைதுசெய்து இன்று (08) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.

சந்தேகநபர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதியின் சட்டத்தரணி றியென்சி அர்சகுலரத்ன, தனது கட்சிக்காரருக்கு நிபந்தனையில் பிணை வழங்குமாறு நீதவானிடம் கோரினார்.

சந்தேகநபர் ஒரு சம்பவத்திற்காக பிணையில் இருந்த போது இதேபோன்ற குற்றத்தை செய்து பிணை சட்டத்தை மீறியுள்ளதாக தெரிவித்த நீதவான், பிணை கோரிக்கையை நிராகரித்து சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

நேற்று (07) பத்தரமுல்லை நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் தியத்த உயனேயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய போதே கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணைப் பிரிவினரால் தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டார்.

நடிகை தமிதா அபேரத்ன போராட்டக் களத்தில் தீவிர செயற்பாட்டாளராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி