தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு - காலி முகத்திடலில் மக்கள் முன்னெடுத்துள்ள அமைதிப்போராட்டம் 11 ஆவது நாளாக இன்றைய தினமும் தொடர்கிறது.

மக்களின் கோரிக்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட ஆளும் தரப்பு வீடு செல்ல வேண்டும் என்பதாக இருந்த போதிலும் நேற்றைய தினம் புதிய அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவிபிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் மக்களின் கோரிக்கைகளை அரசு புறக்கணித்துள்ளதாக குற்றம் சாட்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை மேலும் வலுவாக முன்னெடுத்து வருகின்றனர். 

இந்த இன, மத பேதமற்ற போராட்டத்தை குழைக்கும் நோக்கி பல சதி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் மக்கள் ஒற்றுமையாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். நாட்டை நாம் வடக்கு கிழக்கு என்று பிரிக்கப் போவதில்லை. அதே போன்று சிங்களம் , தமிழ் என்றும் பிரிக்கப் போவதில்லை.

 மத அடிப்படையிலும் நாம் பிரியப் போவதில்லை என்று தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மெழுவர்த்தி ஏந்தி தமது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். 

இதேவேளை நேற்றையதினம் ஊடகவியலாளர்களும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இணைந்துகொண்டதுடன் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். நாடளாவிய ரீதியிலுள்ள சைக்கிள் ஓட்ட போட்டி வீரர்களும் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

 நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து சைக்கிளில் வருகை தந்த அவர்கள் காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, அண்மையில் இங்கிலாந்தில் இடம்பெற்ற ஒலிவர் திரைப்பட விருது வழங்கும் விழாவில் உலகின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுக் கொண்ட இலங்கையரான ஹிரான் அபேசேகர காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்தார். 

இவ்வாறானதொரு விருதைப் பெற்றமை மனதிற்கு மகிழ்ச்சியளிக்கின்ற போதிலும் , இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையில் தன்னால் அந்த மகிழ்ச்சியை உணர முடியாமலுள்ளதாகவும், அதன் காரணமாகவே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள தான் இங்கு வருகை தந்தததாகவும் அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி