கல்முனையில் கொரோனா நிலைமை மோசமாகிவருகிறது. எனவே தொற்று கூடுதலாக இனங்காணப்பட்ட பகுதிகள் அடங்கலாக கல்முனை மாநகரை முற்றாக முடக்கி மக்களைக் காப்பாற்றுமாறு கோரும் மகஜரை கல்முனை மாநகரசபை மேயர் சட்டத்தரணி எ.எம்.றக்கீப் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் டொக்டர் கு. சுகுணன் கல்முனை பிரதான பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.எச். சுஜித்பியந்த  ஆகியோரைச் சந்தித்த பொதுமக்கள் பிரதிநிதிகள் கையளித்து வேண்டுகோள் விடுத்தனர்.

த.தே.கூட்டமைப்பின் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் ஏற்பாட்டில்  சுபத்ராராமய விகாராதிபதி வண. ரண்முத்துகல சங்கரத்ன தேரர் கல்முனை சர்வாத்த சித்திவிநாயகராலய பிரதமகுரு சிவஸ்ரீ. க.கு. சச்சிதானந்த சிவக்குருக்கள் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான வி. சிவலிங்கம் கே. செல்வராசா எஸ். சந்திரன் ஆகியோர் சேர்ந்து இந்தச் சந்திப்பை மேற்கொண்டதுடன் பொது அமைப்புகளின் மகஜர்களையும் கையளித்தனர்.

சுகாதாரப்பணிப்பாளர் டொக்டர் சுகுணன் பதிலளிக்கையில்,

முடக்கும் அதிகாரம் எம்மிடம் இல்லை. ஆனால் தொற்றுக்களின் விபரம் மற்றும் சந்தையின் ஆபத்தான நிலை தொடர்பாக நாம் எமது தலைமைக்கும் கொவிட் குழுவுக்கும் அறிவிப்போம். முடக்குவது தொடர்பாக அவர்களே தீர்மானிப்பார்கள் என்றார்.

மேயர் றக்கீக் பதிலளிக்கையில் கோரிக்கையை ஏற்கிறேன். ஆனால் முழு மாநகரையும் முடக்குவது பற்றி இன்னும் ஆராயவேண்டும். சுகாதாரம் பாதுகாப்புத்துறைகளும் ஆலோசனை தரவேண்டும், என்றார்.

அதற்கு குழுவினர் சார்பாக உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் கூறுகையில்:

எல்லாவற்றையும் முடக்க கஷ்டமென்றால் எமது வடக்கு தமிழ்ப் பிரதேசங்களையாவது முடக்கி எமது மக்களைக் காப்பாற்றுங்கள் என்றார்.

மேயர் பதிலளிக்கையில் எதற்கும் கலந்துரையாடலை நடாத்தி முடிவுக்கு வருவோம் என்றார்.

நேற்றுமுன்தினம் மாலை  கல்முனை விகாரையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் மேற்படி முடக்கல் கோரிக்கையை பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களிடம் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

அதேவேளை கல்முனை மாநகர எல்லைக்குள் கொரோனா எண்ணிக்கை 228 தொற்றுக்களாக  அதிகரித்திருக்கிறது. கல்முனை தெற்கில் 170 பேரும் சாய்ந்தமருதில் 34 பேரும் கல்முனை வடக்கில் 14 பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சாய்ந்தமருதில் ஒரு மரணம் சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கல்முனைக்குடியை மையமாகக் கொண்ட கல்முனை தெற்கு சுகாதாரப்பிரிவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக 170 ஆக உயர்ந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணிநேரத்தில், 41 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.லதாகரன் தொவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி