யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின்போது சிசுக்களின் என்புத் தொகுதி மற்றும் சிறுவர்களின் என்புத் தொகுதிகள்
எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதிகள் உட்பட 8 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.
இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்வடைந்துள்ளது.
யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இரண்டிலிருந்து குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தலை ஒத்த பொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் செய்மதிப் படங்கள் மூலம் சில பகுதிகள் சந்தேகத்தின் அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்டு தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்து.
அந்தப் பகுதிகள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடயவியல் அகழ்வாராய்ச்சித் தளம் இரண்டாக அறிவிக்கப்பட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் பணியாளர்களின் உதவியோடு அகழ்வுப் பணிகள் கடந்த ஜூலை மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகின.
அங்கு நேற்று அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற நிலையில் குழந்தைகளுக்குப் பாலூட்டும் போத்தலை ஒத்த பொருள் ஒன்றும், வெள்ளை நிற ஆடை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்றைய அகழ்வின் பின்னரே இது தொடர்பான மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெறும்.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 17ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
நேற்றைய அகழ்வின்போது சிசுக்களின் என்புத் தொகுதி மற்றும் சிறுவர்களின் என்புத் தொகுதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 6 - 7 வரையான என்புத் தொகுதிகள் உட்பட மொத்தமாக 8 மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 80 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 65 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் எஸ்.லெனின்குமாரின் கண்காணிப்பில் துறைசார் நிபுணர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றன.
காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் மற்றும் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர் ஆகியோரும் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி இருந்தனர்.
அதேவேளை, நேற்றைய அகழ்வுப் பணிகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரகுராம், தொல்லியல் துறை விரிவுரையாளர் ஆகியோர் நேரில் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.