நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு காணபடவில்லை என்று தெரிவித்த பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2 மாத காலத்திற்கு
தேவையான எரிபொருள் கொள்வனவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா, "அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஓர்டர் செய்துள்ளோம் என்பதை மக்களுக்குச் சொல்ல விரும்புகிறோம். அந்த ஓர்டர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இன்னும் இரண்டு மாதங்களுக்கு இந்த நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. எக்காரணம் கொண்டும் எரிபொருள் தட்டுப்பாடு வராது. அதற்குப் பின்னர்தான், எரிபொருள் எங்கிருந்து கிடைக்கும் என்பதுபற்றி யோசிக்க வேண்டும். அதற்கு, உலக நாடுகளில் நிலவும் யுத்தத்தின் தாக்கம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்” என்றார்.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சட்டவிரோதமாக எரிபொருள் இருப்புக்களை குவிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஜே.ராஜகருணா தெரிவித்தார்.
"எங்களிடம் உள்ள அறிக்கைகளின்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் பெருமளவிலானவை, போர் மண்டலங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படவில்லை. அந்த எரிபொருள், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்தே எங்களுக்கு வருகிறது. ஓமானிலிருந்து ஒன்று மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டாலும், எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காது. நாங்கள் சப்ளையர்களிடம் பேசி அதை முழுமையாக உறுதிப்படுத்துகிறோம். டீசல் முழுமையாக வாங்கப்படுகிறது, எனவே போர் மண்டலங்களிலிருந்து இறுதி தயாரிப்பாக நாங்கள் அதைப் பெறுவதில்லை” என்று அவர் மேலும் கூறினார்.