"மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்காத வகையிலேயே 'அணையா விளக்கு' போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இரவிரவாகத் தொடரும் இந்தப் போராட்டத்துக்குத் தேவையான மலர்கள், தேங்காய் எண்ணெய், விளக்குத் திரிகள் மற்றும் மின்பிறப்பிக்கான பெற்றோல் போன்றவற்றை மக்களிடம் எதிர்பார்த்து நிற்கின்றோம்” என்று, 'அணையா விளக்கு' போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைக்குழிக்குச் சர்வதேச நீதி கோரி 'மக்கள் செயல்' அமைப்பின் ஏற்பாட்டில் 'அணையா விளக்கு' எனும் மூன்று நாள் தொடர் போராட்டம் யாழ். நல்லூர் வளைவுக்கு அருகில் நேற்றுக் காலை ஆரம்பமாகி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இரவுப் பொழுதில் கதை படித்தல், ஆவணப்படம் திரையிடல் போன்றன இடம்பெறுகின்றன. இந்நிலையில், இந்தப் போராட்டம் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்காத வகையில் நாளை புதன்கிழமை வரை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
"இந்தப் போராட்டத்துக்குத் தேவையான மலர்கள், தேங்காய் எண்ணெய், விளக்குத் திரிகள் மற்றும் மின்பிறப்பிக்கான பெற்றோல் போன்றவற்றைத் தரக்கூடியவர்கள் தந்து உதவுமாறும் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். போராட்டக் களத்தில் இருக்கக்கூடியவர்களுக்கான உணவு, நீர் வசதிகளையும் தரக்கூடியவர்கள் தந்து உதவுமாறும் கோரிக்கை விடுக்கின்றோம்." - என்றும் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
-முரசு
https://www.facebook.com/100037509187400/videos/1095736855750550