அரசியல் காரணங்களுக்காக
தனது கணவர் விஜய குமாரதுங்கவைக் கொலை செய்தது போன்று தன்னையும் கொலை செய்வதற்குத் சதித்திட்டம் தீட்டப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தமக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைக் தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது,
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ஹேமசிறி கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி எழுதியுள்ள கடிதத்தில் தனது பாதுகாப்பு படையின் எண்ணிக்கையை 50ல் இருந்து 30 ஆகக் குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மற்றைய முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 243 மற்றும் 200 மற்றும் 109 என்ற பாதுகாப்பு குழுக்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், தனக்கு 30 பாதுகாவலர்களை மட்டுமே வழங்குவது எந்த அளவுகோலின் படி முடிவு செய்யப்பட்டது என்பது புதிராக உள்ளது.
மேலும், ஓய்வுபெற்ற ஐந்து ஜனாதிபதிகளில் தனக்கு அதிக அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் கொலை முயற்சியில் காயமடைந்த ஒரே ஜனாதிபதி தாம் தான் எனவும் முன்னாள் ஜனாதிபதி தனது கடிதத்தில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவிடம் 63 இராணுவ அதிகாரிகளும், 180 பொலிஸ் உத்தியோகத்தர்களும் 243 பாதுகாப்பு அதிகாரிகளும், மைத்திரிபால சிறிசேனவிடம் 109 பொலிஸ் உத்தியோகத்தர்களும், 200 பாதுகாப்பு அதிகாரிகளும் கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் 175 இராணுவ அதிகாரிகளும், 25 பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளனர்.
மேலும், ஜனாதிபதித் தேர்தலின்போது தமக்கு உயரடுக்கு பாதுகாப்பு கிடைக்காது என ஜே.வி.பி தலைவர்கள் கூறியதாகவும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.