அம்பாறை மாவட்டத்தில்

34 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் கிராம மக்கள் நினைவு கூரப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அம்பாறை திராய்க்கேணி, முத்துமாரி அம்மன் ஆலயத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி விசேட பூஜை வழிபாடுகளை நடத்தியதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
6 ஓகஸ்ட் 1990 அன்று காலை அரச படையினரின் ஆதரவைப் பெற்ற கும்பல் ஒன்று திராய்க்கேணி கிராமத்திற்குள் புகுந்து சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என 54 பேரை வெட்டிக் கொலை செய்தது.
 
அரசாங்கப் படைகளின் உதவியுடன் பிள்ளையார் ஆலயத்திற்குள் நுழைந்த கொலையாளிகள் தங்கள் உறவினர்களைக் கொன்றதுடன் ஆலயத்தையும் சேதப்படுத்தியதாக தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் கூறுகின்றனர்.
 
அதற்கு முன்தினம் அலிமன்காடு பகுதியில் நெல் வயல் ஒன்றில் விவசாயிகள் சிலர் கொலை செய்யப்பட்டமைக்கு பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
 
1954ஆம் ஆண்டு பாலமுனை, ஒலுவில், மீனோடைகட்டு, அட்டாளைச்சேனை ஆகிய நிலமற்ற தமிழ் மற்றும் முஸ்லிம் கிராம மக்களுக்கு 300 ஏக்கர் செழிப்பான தென்னந்தோப்பை ஒரு ஏக்கர் 200 ரூபாய்க்கு பெயரளவில் கொள்வனவு செய்து, திராய்க்கேணி கிராமம் உருவாக்கப்பட்டது.
 
போரினால் பாதிக்கப்பட்ட திராய்க்கேணி கிராம மக்கள் இன்றும் இன்னல்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
கொல்லப்பட்ட அவர்களது உறவினர்கள் குறித்து நியாயமான விசாரணை நடத்தி கொலைக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே கொலையுண்டவர்களின்
உறவினர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 
xfget6
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி