முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரரை கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் தற்போது தேடி வருகின்றனர்.
கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 10 இடங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் பல விகாரைகள் மற்றும் வீடுகள் அடங்கும் என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தேடப்பட்ட இடங்களில் தேரர் வந்ததற்கான எந்த தகவலும் இல்லாததால், அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்க சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேரர் தென் மாகாணத்தில் உள்ள பல விகாரைகளிலும் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள பல வீடுகளிலும் மறைந்திருக்க அதிக வாய்ப்புள்ளதால், கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் தற்போது அந்த இடங்களையும் கண்காணித்து வருகின்றனர்.
2020ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றதற்காக, அபே ஜன பல கட்சியின் பொதுச் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரரை கடத்தி, அவரை அச்சுறுத்தியமை தொடர்பில் அத்துரலியே ரத்தன தேரர் கைது செய்யப்பட உள்ளார்.
கடந்த காலங்களில் தடைப்பட்ட இந்த விசாரணை, கொழும்பு குற்றப் பிரிவின் புதிய இயக்குநராக மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் இந்திக லொக்குஹெட்டி நியமிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.