இலங்கை பிரஜைகளுக்கான டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய
அரசாங்கத்துக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இரத்து செய்யக் கோரி, இலங்கை உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் அமானி ரிஷாட் ஹமீத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளில் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட 27 பேர் அடங்குவர்.
மனுவின்படி, இந்த விவகாரம் தொடர்பான இரண்டு அமைச்சரவை முடிவுகள் ஜனவரி 27 மற்றும் ஜூன் 2 ஆகிய திகதிகளில் பொதுமக்களுக்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ தெரிவிக்காமல் எடுக்கப்பட்டதாகவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், இலங்கை பிரஜைகளின் உயிரியல் தரவுகள் (biometric data) மற்றும் தனிப்பட்ட தகவல்களை இந்தியா அணுக முடியும் என்றும், இதன் மூலம் இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிட முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது இலங்கையின் இறையாண்மை, தேசிய பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தில் ஒரு வெளிநாட்டு அரசு தலையிட வாய்ப்பளிக்கும் என்று கூறப்பட்டுள்ளதோடு , இது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தொடர்புடைய அமைச்சரவை முடிவுகளை செல்லாததாக்க உத்தரவு பிறப்பிக்கவும், இந்த டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்துவதைத் தடுக்கவும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.