பொதுத் தேர்தலுக்காக வன்னி
மாவட்டத்தில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி பரராஜசிங்கம் உதயராசா உள்ளிட்ட குழுவினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவில் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் வன்னி மாவட்ட தேர்தல் அதிகாரி உள்ளிட்டவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அனைத்து ஆவணங்களும் முறையாக சமர்பிக்கப்பட்டபோதும் வேட்பு மனுவை நிராகரிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுத்ததாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதன்படி, இது தொடர்பான தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது எனவும், அதனை இரத்துச் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுதாரர்கள் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள வன்னி மாவட்ட பொதுத் தேர்தல் வாக்கெடுப்பை இடைநிறுத்துமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் மேலும் கோரியுள்ளனர்.