அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான அவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


பொலிஸ்மா அதிபர் , பொலிஸார் ஏனைய பாதுகாப்புபடையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலேயே செயற்பட வேண்டும் எனவும் குறித்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுமாறு கோரி 

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் காலிமுகத்திடலுக்கு செல்லும் பல வீதிகளில் கடினமான வீதித்தடைகள் பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து விஜேராமவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். உத்தியோகபூர்வ இல்லத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்ட நிலையில், சில மாணவர்கள் சுவரில் ஏறி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த பேரணியானது பஞ்சிகாவத்தை, புஞ்சி பொரளை, பொரளை ஊடாக சென்று கெப்பெட்டிபொல வீதி ஊடாக விஜேராம மாவத்தைக்குள் பிரவேசித்ததுடன் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

 
இந்த மாணவர்களின் போராட்டத்தை தடுக்க செயற்பட்டமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சட்டத்தரணிகள் சங்கம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொழும்பை அண்மித்துள்ள ஒரு சில வீதிகளில் நேற்றைய தினம் ஏற்படுத்தப்பட்ட வீதித் தடைகளில் கூரிய ஆணி போன்ற கம்பிகளை பொருத்தி கறுப்பு நிற பொலித்தீனால் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மக்களுக்கு பாரிய காயங்கள் ஏற்படுவதற்கான அபாயம் நிலவுகின்றமை தொடர்பில் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

பொலிஸ்மா அதிபர், பொலிஸார் மற்றும் படையினர் எந்தவொரு நிலைமையின் கீழும் எதிர்ப்பில் ஈடுபடுபவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கும் உள்ள மக்களின் உரிமையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏதேனும் வன்முறை சூழல் ஏற்பட்டால் அது நாட்டிற்கு பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி